உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று ராஜஸ்தான் மாநிலம் பின்மாலில் அமைந்துள்ள நீலகண்ட மகாதேவ் கோயில் மறுசீரமைப்பு மற்றும் கும்பாபிஷேகம் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் யோகி ஆதித்யநாத் மற்றும் மத்திய நீர் மின்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோர் ருத்ராட்ச மரத்தை நட்டனர். அப்போது பேசுகையில், ‘அயோத்தியில் ராமர் கோவில் போன்று, நமது வழிபாட்டுத் தலங்கள் எந்தக் காலகட்டதில் இழிவுபடுத்தப்பட்டிருந்தாலும், அதை மீட்டெடுக்க மக்கள் பிரசாரம் செய்ய வேண்டும்.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் 500 ஆண்டுகளுக்குப் பிறகு பிரமாண்ட ராமர் கோயில் கட்டப்படும் அயோத்தியைப் போல, மற்ற கோயில்களை மீட்டெடுப்பதற்கான பிரசாரம் தொடங்கப்பட வேண்டும். தேசிய உணர்வைப் பிரதிபலிக்கும் வகையில், இந்த பிரமாண்டமான ராமர் கோயிலைக் கட்டுவதற்கு பக்தர்கள் அனைவரும் பங்களித்துள்ளீர்கள். ஒட்டுமொத்த நாட்டு மக்களும் தங்கள் பாரம்பரியத்தை மதிக்கவும், அதைப் பாதுகாக்கவும் உறுதிமொழி எடுக்க வேண்டும்.
சனாதன தர்மம் இந்தியாவின் தேசிய மதம். அதை ஒவ்வொரு குடிமகனும் மதிக்க வேண்டும். ராஜஸ்தானில் சுமார் 1400 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நீலகண்டப் பெருமானின் ஆலயத்தைப் புனரமைத்திருப்பது, பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கான எடுத்துக்காட்டு. ராஜஸ்தான் நிலம் மதம், கர்மா, பக்தி மற்றும் சக்தி ஆகியவற்றின் ஒருங்கிணைப்பின் மையப் புள்ளி. இந்து மதத்தின் உண்மையான ரகசியங்களை நீங்கள் புரிந்து கொள்ள விரும்பினால், ராஜஸ்தானுக்கு வர வேண்டியது அவசியம்.” எனத் தெரிவித்திருக்கிறார்.
உ.பி முதல்வரின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் காங்கிரஸின் (கேகேசி) தலைவர் உதித் ராஜ், “சனாதன தர்மம் இந்தியாவின் தேசிய மதம் என்று முதல்வர் யோகி கூறினார். இதன் பொருள் சீக்கியம், ஜெயின், பௌத்தம், கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் போன்ற பிற மதங்கள் முடிந்துவிட்டனவா?” என கேட்டிருக்கிறார்.