International
bbc-BBC Tamil
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் ஜனவரி 30ஆம் தேதி காஷ்மீரில் நிறைவடைகிறது.
பாதுகாப்பில் குறைபாடு இருப்பதாக கூறி நேற்றைய யாத்திரையை ரத்து செய்த காங்கிரஸ் , இது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி கன்னியாகுமரியில் இந்திய ஒற்றுமை பயணம் என்ற நடைபயணத்தை ராகுல் காந்தி தொடங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு நடைபயணத்தை தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டார்.
இந்த யாத்திரையில் பல்வேறு அரசியல் தலைவர்கள், திரைத்துறை பிரபலங்கள், ரிசர்வ் வங்கி முன்னாள் இயக்குநர் ரகுராம் ராஜன் போன்ற ஆளுமைகள் கலந்துகொண்டனர். 132 நாட்களில் 14 மாநிலங்களின் 72 மாவட்டங்களை கடந்துள்ள இந்த நடைபயணம் தற்போது ஜம்மு காஷ்மீரை அடைந்துள்ளது. வரும் ஜனவரி 30ஆம் தேதி ஸ்ரீநகரில் இந்த நடைபயணம் நிறைவடைகிறது.
நேற்றைய தினம் பாதுகாப்பு குறைப்பாடு இருப்பதாக கூறி நடைபயணத்தின் பிற்பகல் நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டன. காஷ்மீரின் காசிகண்ட் பகுதியில் ராகுல் காந்தி நுழைந்தபோது, பாதுகாப்பு வளையத்திற்கு வெளியே இருக்க வேண்டிய காஷ்மீர் போலீசார் திடீரென மாயமாகினர். ராகுல் காந்தியை பார்க்க வந்த கூட்டத்தையும் பாதுகாப்புப் படையினர் முறையாக கையாளவில்லை என்றும் 15 நிமிடங்களுக்கு பாதுகாப்பு அதிகாரிகள் யாரும் இல்லையென்றும் காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டது.
ஒமர் அப்துல்லா என்ன சொன்னார்?
இதேபோல், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா, தனது டிவிட்டர் பக்கத்தில், “இதற்கு நான் சாட்சி. ராகுல் காந்தி நடக்கத் தொடங்கிய சில நிமிடங்களில் ஜம்மு காஷ்மீர் போலீசார் பராமரிப்பில் இருந்த பாதுகாப்பு வளையத்தின் வெளிப்பகுதியில் இருந்து போலீசார் திடீரென காணாமல் போயினர். நாங்கள் ஜம்முவில் இருந்து காஷ்மீருக்கு வந்திருந்தோம். மேலும் 11 கிலோ மீட்டர் நடைபயணம் மேற்கொள்வதாக இருந்தோம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அது ரத்து செய்யப்பட்டது ” என்று பதிவிட்டுள்ளார்.
இன்று ஜம்மு காஷ்மீரின் அவந்திபோராவில் இருந்து ராகுல் காந்தி தனது நடைபயணத்தை தொடங்கினார். மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெஹபூபா முஃப்தி உள்ளிட்டோர் நடைபயணத்தில் பங்கேற்றனர்.
https://twitter.com/OmarAbdullah/status/1618904905368076295?s=20&t=ilGP2gBVAQ59SlLxNrathA
மல்லிகார்ஜுன கார்கே எழுதியது என்ன?
30ஆம் தேதி நடைபெறவுள்ள நடைபயணத்தின் இறுதி நிகழ்வில் ஏராளமானோர் பங்கேற்பார்கள் என்பதால், வெள்ளிக்கிழமை நடந்ததுபோன்று பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக காங்கிரஸ் கட்சி சார்பில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே எழுதியுள்ள கடிதத்தில், “அடுத்த 2 நாட்களுக்கு ஸ்ரீநகரில் ஜனவரி 30ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பல்வேறு மூத்த அரசியல் தலைவர்கள் மற்றும் பிற கட்சிகளைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் ஜனவரி 30ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளார்கள். இந்த விவகாரத்தில் நீங்கள் தனிப்பட்ட முறையில் தலையிட்டு, போதிய பாதுகாப்பு வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்க வேண்டும் ” என்று குறிப்பிட்டுள்ளார் கார்கே.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
English summary
Ensure adequate security for Rahul Gandhis Bharat Jodo Yatra: Congress writes to Amit Shah