புதுடில்லி,-முஸ்லிம் உள்ளிட்ட சிறுபான்மையினரில் மிகவும் பின்தங்கியுள்ள மக்களை அடையாளம் கண்டு, அவர்களுடைய ஆதரவைப் பெறும் வகையில், மோடி நண்பர்கள் என்ற இயக்கத்தை துவக்க பா.ஜ., புதிய யுக்தியை வகுத்துள்ளது.
லோக்சபாவுக்கு, ௨௦௨௪ல் தேர்தல் நடக்க உள்ளது. மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க மத்தியில் ஆளும் பா.ஜ., தீவிரமாக உள்ளது. இதற்கான பணிகளில் அக்கட்சி ஏற்கனவே இறங்கியுள்ளது.
இதுவரை வெற்றி வாய்ப்பு கிடைக்காத அல்லது கடந்த தேர்தல்களில் மிகவும் குறைந்த ஓட்டுகளில் வெற்றி வாய்ப்பை இழந்த தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்தத் தொகுதிகளில் வரும் தேர்தலில் அதிக இடங்களைப் பிடிக்க பா.ஜ., தீவிர பிரசாரத்தில் ஈடுபடத் துவங்கியுள்ளது.
௩௦ சதவீதம்
இந்நிலையில், சிறுபான்மையினரின் ஓட்டுகளைப் பெறுவதற்கான புதிய முயற்சியில் பா.ஜ., இறங்கியுள்ளது. குறிப்பாக, சிறுபான்மையினரில் மிகவும் பின்தங்கியுள்ள சமூகத்தினரை அடையாளம் கண்டு, அவர்களின் மேம்பாட்டுக்கான பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
இதை, சமீபத்தில் நடந்த பா.ஜ.,வின் தேசிய செயற்குழுவில் பிரதமர் மோடி வலியுறுத்தினார். இதையடுத்து, இந்தப் பணியில், பா.ஜ.,வின் சிறுபான்மையினர் பிரிவு ஈடுபட்டுள்ளது.
பா.ஜ., சிறுபான்மையினர் பிரிவின் தேசிய செயற்குழு கூட்டம், சத்தீஸ்கரின் ராய்ப்பூரில் வரும், பிப்., ௧ – ௨ தேதிகளில் நடக்க உள்ளது. இதன்பின், மிகவும் பின்தங்கியுள்ள சிறுபான்மையினரைக் கவருவதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
இது குறித்து, பா.ஜ., சிறுபான்மையினர் பிரிவு தேசியத் தலைவர் ஜமால் சித்திகி கூறியுள்ளதாவது:
முஸ்லிம்களில் பஸ்மந்தாஸ், போரா சமூகத்தினர் மிகவும் பின்தங்கியுள்ளனர். இவர்களுடைய வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் பா.ஜ., ஈடுபட உள்ளது.
இதுபோல சிறுபான்மையினரில் மிகவும் பின்தங்கியுள்ளோர் அதிகம் உள்ள, ௬௦ லோக்சபா தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதாவது, இந்தத் தொகுதி யின் மொத்த வாக்காளர்களில், ௩௦ சதவீதம் பேர் மிகவும் பின்தங்கிய சிறுபான்மையினர்.
அதிர்ச்சி
இவர்களை, பிரதமரின் ஏழைகள் நலவாழ்வு திட்டங்கள் சென்றடையவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
மேற்கு வங்கத்தில் பஸ்மந்தாஸ், போரா பிரிவினர் அதிகம் உள்ளனர். வழக்கமாக பா.ஜ.,வை முஸ்லிம்களுக்கு எதிரான கட்சி என்று கூறுவர். ஆனால், மேற்கு வங்கத்தில் பா.ஜ., இதுவரை ஆட்சி அமைத்ததில்லை. ஆனால், இந்த மக்கள், இங்கு தொடர்ந்து பின்தங்கியவர்களாகவே உள்ளனர்.
அதே நேரத்தில் குஜராத்தில், பா.ஜ., தொடர்ந்து, ௨௭ ஆண்டுகளாக ஆட்சியில் உள்ளது. முஸ்லிம்களில் மிகவும் முன்னேறியவர்கள் அல்லது மிகவும் பணக்காரர்கள் அதிகம் உள்ள மாநிலம் குஜராத். இதில் இருந்து, அனைத்து தரப்பு மக்களுக்குமான கட்சி பா.ஜ., என்பது தெளிவாகும்.
|
இதை முஸ்லிம் உள்ளிட்ட சிறுபான்மையினரும் உணர்ந்துள்ளனர். இந்த பிரதமரின் நண்பர்கள் அல்லது மோடி நண்பர்களின் உதவிகளை, கட்சி பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும், ௨௦௦ பின்தங்கிய சிறுபான்மையினர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். அவர்கள் ஒவ்வொருவர் வாயிலாக, குறைந்தபட்சம், மேலும், ௧௦௦ பேரின் ஆதரவை திரட்ட உள்ளோம். விரைவில் இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும்.
சிறுபான்மையினரில் பின்தங்கியவர்கள் அதிகம் உள்ள பகுதி, கேரளாவின் வயநாடு. இந்தத் தொகுதியின் எம்.பி.,யாக உள்ளவர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் என்பது அதிர்ச்சியாக இருக்கும். ஆனால், இதுதான் உண்மை நிலை.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்