வேலூர் அருகிலிருக்கும் பாலமதி மலை உச்சியில், ‘குழந்தை வேலாயுதபாணி’ திருக்கோயில் அமைந்திருக்கிறது. இந்தக் கோயிலில் இருந்து 100 அடிக்கு கீழிருக்கும் பாறைகளின் இடுக்கு பள்ளத்துக்குள் இளம்பெண் ஒருவரின் சடலம் கிடந்தது. தகவலறிந்ததும், சம்பவ இடத்துக்கு விரைந்துச் சென்ற பாகாயம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீஸார், உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர். அப்போதுதான் தெரிந்தது, அந்தப் பெண் கொலைச் செய்யப்பட்டு மலையில் இருந்து உருட்டிவிடப்பட்டிருக்கிறார் என்று!
கட்டையால் முகம், தலையில் கொடூரமாக தாக்கியிருப்பதும், பாட்டிலால் கழுத்தை குத்திக் கிழித்திருப்பதும் தெரியவந்தது. முகம் வீங்கி அடையாளம் காண முடியாதபடி விகாரமாகக் காணப்பட்டது. கழுத்தில் தாலி, கால் விரலில் மெட்டி அணிந்திருப்பதை வைத்து அவர் திருமணம் ஆனவர் என்று முடிவுக்கு வந்தது போலீஸ்.
கொலைச் செய்யப்பட்ட பெண் சுடிதார் அணிந்திருந்தார். பெண் போலீஸாரைக் கொண்டு ஆய்வு செய்த போது, மார்புப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கடிதம் ஒன்று சிக்கியது. அந்தக் கடித்தத்தை வைத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டதில், கொலைச் செய்யப்பட்ட பெண் கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடியைச் சேர்ந்த 23 வயதே ஆகும் குணப்பிரியா என்பது தெரியவந்தது. அவரின் உடையில் சிக்கிய கடிதத்தை அவரே எழுதி மறைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது. அதில், ‘‘என் பெயர் குணப்பிரியா. நான் சென்னையிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைச் செய்து வந்தேன். ஓராண்டுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் வேலூரைச் சேர்ந்த கார்த்தி என்பவனுடன் எனக்குப் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்து, கடந்த ஆண்டு காட்பாடி அருகேயுள்ள வள்ளிமலை முருகர் கோயிலில் திருமணம் செய்து கொண்டோம். வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், எங்களை இருத்தரப்பு பெற்றோர்களுமே ஏற்றுக்கொள்ளவில்லை.