நாமக்கல்: பள்ளிபாளையம் அருகே வெப்படையில் நாட்டு ரக கைத்துப்பாக்கி வீட்டில் பதுக்கி வைத்திருந்த வட மாநிலத்தை சேர்ந்த இரு வாலிபர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கைத்துப்பாக்கி மற்றும் 8 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பீகாரை சேர்ந்த மணிஷ்குமார் (26). ஜார்கண்டைச் சேர்ந்தவர் சாகர் (19). இருவரும் கடந்த ஒரு மாதத்துக்கு முன், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே வெப்படை அடுத்த வால் ராஜ்பாளையம் பகுதியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர். அவர்கள் இருவரும்
வடமாநிலத்தை சேர்ந்தவர்களை நூற்பாலைக்கு வேலைக்கு அனுப்பும் ஏஜெண்ட்கள் எனத் தெரிவித்துள்ளனர். எனினும் இருவரின் நடமாட்டம் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்ததால், அதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் வெப்படை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து வாலிபர்களின் நடமாட்டம் அவர்கள் தங்கி இருந்த வீட்டையும் போலீஸார் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர். அதில் இருவர் மீதான சந்தேகம் உறுதியானதால் நேற்று முன்தினம் காலை வடமாநில வாலிபர்கள் தங்கி இருந்த வீட்டில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு நாட்டுரக கைத் துப்பாக்கி, எட்டு தோட்டாக்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததை கண்டு போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். அவற்றை பறிமுதல் செய்த போலீஸார் மணீஸ் குமார், சாகர் இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பேசுபொருளாகி உள்ளது.