Loading

சேலம்: சேலம், செவ்வாய்ப்பேட்டையில் பட்டறை அதிபர் உள்பட மூன்று பேரை முகமூடி அணிந்து வந்த மர்ம கும்பல் அரிவாள் போன்ற ஆயுதங்களால் தாக்கியது. இதுகுறித்து சிசிடிவி காட்சி பதிவைக் கொண்டு, மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

சேலம், செவ்வாய்ப்பேட்டை நரசிம்ம செட்டி ரோடு பகுதியைச் சேர்ந்த சிவக்குமார், பள்ளப்பட்டி அருகே கோரிக்காடு பகுதியில் பருப்பு மில்லுக்கு தேவையான இயந்திரங்களை தயாரிக்கும் பட்டறை வைத்துள்ளார். இந்நிறுவனத்தில் பாஸ்கர், சாரதி ஆகிய இருவர் பணிபுரிந்து வருகின்றனர். நேற்று காலை வழக்கம்போல பட்டறையைத் திறந்து சிவக்குமார் மற்றும் பணியாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, இரண்டு சக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து வந்த மர்ம கும்பல் சிவக்குமாரை இரும்பு கம்பி மற்றும் அரிவாளால் தாக்கியது. மர்ம கும்பலை தடுக்க முயன்ற பட்டறை ஊழியர்கள் பாஸ்கர், சாரதி ஆகியோரையும் அரிவாளால் வெட்டியது. பின்னர் அக்கும்பல் தப்பிச் சென்றது. படுகாயம் அடைந்த மூவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

சேலம் காவல் துணை ஆணையர் மாடசாமி உத்தரவின் பேரில், சம்பவ இடம் சென்ற உதவி ஆணையர் நாகராஜ் தலைமையிலான போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். முதல்கட்ட விசாரணையில், சிவக்குமாருக்கு சொந்தமான வீடு திருமலைகிரி பகுதியில் உள்ளது. அந்த வீட்டின் மற்றொரு பகுதியில் ஏழுமலை என்பவரும் குடியிருந்து வருகிறார்.

இந்நிலையில், ஏழுமலைக்கும், சிவக்குமாருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இப்பிரச்சினையில் முகமூடி அணிந்த நபர்கள் தாக்குதல் நடத்தினரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், பட்டப்பகலில் பட்டறையில் புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவம் வீடியோவில் வைரலாகி வருகிறது. இதையடுத்து, சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு, தாக்குதலில் ஈடுபட்ட முகமூடி கும்பல் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி, அவர்களைப் பிடிக்கும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *