Loading

தூத்துக்குடி: தூத்துக்குடியில் யூரியா உரத்தை பொடியாக்கி ஹெராயின் போதைப் பொருள் எனக்கூறி விற்க முயன்ற நபரை போலீஸார் கைது செய்தனர்.

போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் , வடபாகம் காவல் ஆய்வாளர் சாந்தி, உதவி ஆய்வாளர் சிவராஜா ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீஸார் தூத்துக்குடி பகுதியில் நேற்று முன்தினம் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, தூத்துக்குடி எஸ்.எஸ். பிள்ளை மார்க்கெட் பகுதியில் கையில் பையுடன் சந்தேகத்துக்கிடமாக சுற்றிக் கொண்டிருந்த நபரை பிடித்தனர். அந்த பையில் சீனி போன்ற பொருள் அடங்கிய பாக்கெட்டுகள் இருந்தன. இதனால் சந்தேகம் அடைந்த போலீஸார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில், அவர் தூத்துக்குடி பூபாலராயர்புரத்தை சேர்ந்த ரீகன் ( 42) என்பது தெரியவந்தது.

அவரிடம் இருந்து தலா ஒரு கிலோ எடை கொண்ட 10 பாக்கெட்டுகளை போலீஸார் பறிமுதல் செய்து பரிசோதித்தனர். அந்த பொருள் யூரியா உரம் போல் இருந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் யூரியா உரத்தை பொடியாக்கி, அதனை ஹெராயின் போதைப் பொருள் என்று கூறி கிலோ ரூ.1 லட்சம் விலைக்கு சிலரிடம் விற்பனை செய்ய ரீகன் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. ரீகனை போலீஸார் கைது செய்தனர்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *