India
oi-Jackson Singh
ஸ்ரீநகர்: பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் நடத்திய துல்லியத் தாக்குதலுக்கு ஆதாரம் கேட்பது அற்பத்தனமானது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
பாரத் ஜோடோ யாத்திரையில் நேற்று கலந்துகொண்ட காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், துல்லியத் தாக்குதலுக்கான ஆதாரத்தை மத்திய அரசு வெளியிட மறுப்பது குறித்து கேள்வி கேட்டிருந்த நிலையில், ராகுல் காந்தி இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும், துல்லியத் தாக்குதலுக்கு ராணுவம் எந்த ஆதாரத்தையும் வழங்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இருளில் மூழ்கிய பாகிஸ்தான்.. திடீரென துண்டிக்கப்பட்ட மின்சாரம்.. 12 மணி நேரம் ஆகுமாம்.. என்னாச்சு?
ராணுவம் நடத்திய ‘வேட்டை’
காஷ்மீரின் புல்வாமா பகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சிஆர்பிஎப் துணை ராணுவப் படையினர் வந்த வேன் மீது தீவிரவாதிகள் தற்கொலை படை தாக்குதலை நடத்தினர். இதில் 44 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். இது தொடர்பான விசாரணையில், இந்த தாக்குதலுக்குப் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பது தெரியவந்தது. இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகப் பாகிஸ்தானின் பாலகோட் பகுதிக்குள் வான் வழியே நுழைந்த இந்திய ராணுவம், அங்குள்ள தீவிரவாத முகாம்களைக் குண்டு வீசி அழித்தது. இதில் 300-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் உயிரிழந்தனர்.
கேள்வியெழுப்பிய திக்விஜய் சிங்
இந்த சூழலில், காஷ்மீரில் நடைபெறும் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் திக்விஜய் சிங் கலந்துகொண்டார். அப்போது அவர், “பாகிஸ்தான் மீது துல்லியத் தாக்குதல் நடத்திவிட்டோம் என பாஜக சொல்லிக் கொள்கிறது. ஆனால், அதற்கான ஆதாரத்தை நாடாளுமன்றத்திலோ, மக்களிடமோ பாஜக காட்டவில்லை. இன்று வரை அந்த ஆதாரத்தை மத்திய அரசு காட்டத் தயங்குவது ஏன்?” என அவர் கேள்வியெழுப்பினார்.
“ராணுவத்தை அவமானப்படுத்தும் காங்.,”
இதனிடையே, திக்விஜய் சிங்கின் இந்த பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது. இதுகுறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாத்தியா கூறுகையில், “இந்திய ராணுவத்தைக் காங்கிரஸ் தொடர்ந்து அவமானப்படுத்தியும், இழிவுபடுத்தியும் வருகிறது. பாகிஸ்தான் மீது துல்லியத் தாக்குதல் நடத்தியதாக ராணுவம் கூறுகிறது. ஆனால் அதற்கு ஆதாரம் காட்டினால்தான் நம்புவோம் எனக் காங்கிரஸ் கூறுவது எத்தகைய கீழ்த்தரமான செயல் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். திக்விஜய் சிங்கின் இந்த கருத்துக்கு ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்” என அவர் கூறினார்.
ராகுல் கடும் சாடல்
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து ராகுல் காந்தி இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறியதாவது: துல்லியத் தாக்குதலுக்கு ஆதாரம் தருமாறு திக்விஜய் சிங் கூறியது காங்கிரஸ் கட்சியின் கருத்து அல்ல என்பதைத் தெளிவாகத் தெரிவித்துக் கொள்கிறேன். துல்லியத் தாக்குதலுக்கு எந்தவித ஆதாரத்தையும் ராணுவம் தர வேண்டியதில்லை. ராணுவத்திடம் ஆதாரம் கேட்பது அற்பத்தனமான ஒன்று. இந்திய ராணுவம் தனது வேலையைச் சிறப்பாகச் செய்து வருகிறது. அவர்கள் மீது காங்கிரஸ் எப்போது மதிப்பு வைத்திருக்கிறது என ராகுல் காந்தி கூறினார்.
English summary
Congress MP Rahul Gandhi said that asking proof of surgical strike by Indian Army on Pakistan is ridiculous.
Story first published: Tuesday, January 24, 2023, 22:05 [IST]