சென்னை: போலீஸார் தாக்கியதால் அரியலூர் விவசாயி மரணம் அடைந்ததாக கூறப்படும் வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இவ்வழக்கை போலீஸார் 3 மாதங்களில் முடித்து இறுதி அறிக்கையை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டுமென உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸார் அருண்குமார் என்பவரைத் தேடி காசங்கோட்டையைச் சேர்ந்த விவசாயி செம்புலிங்கம் என்பவரின் வீட்டுக்குள் நுழைந்து அவரையும், அவரது குடும்பத்தினரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் செம்புலிங்கம் மரணமடைந்தார்.

அதையடுத்து போலீஸார் தாக்கியதால் செம்புலிங்கம் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டினர். இது தொடர்பாக விக்கிரமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.

மருத்துவர்கள் குழு: இந்நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக் கோரி செம்புலிங்கத்தின் உறவினரான கார்த்திகேயன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், செம்புலிங்கத்தின் உடலை பிரேத பரிசோதனை செய்ய மருத்துவர்கள் குழுவை அமைத்து உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில் ஆஜரான அரசு குற்றவியல் வழக்கறிஞர் எஸ்.சந்தோஷ், செம்புலிங்கத்தின் பிரேத பரிசோதனை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், வழக்கு விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறி அதற்கான உத்தரவு நகலை சமர்ப்பித்தார்.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.பாலு, இந்த வழக்கை சிபிசிஐடி டிஎஸ்பி தலைமையில் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என கோரினார். அதையேற்ற நீதிபதி, இந்த வழக்கை சிபிசிஐடி டிஎஸ்பி தலைமையில் 3 மாதங்களில் விசாரித்து, இறுதி அறிக்கையை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும், என உத்தரவிட்டார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *