வேலை செய்யும் இடங்களில் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது சகஜம்தான். பல நேரங்களில் ஊழியர்கள் சண்டையை முடித்துக்கொள்வதுண்டு. சில நேரங்களில் சரியான தீர்வு கிடைக்காத பட்சத்தில் வேறு வேலைக்கு செல்வதுமுண்டு. ஆனால் இங்கிலாந்தை சேர்ந்த டாம் வில்லியம்ஸ் என்ற நபர் வித்தியாசமான செயலை செய்து சிக்கலில் சிக்கியுள்ளார்.
25 வயதான டாம் வில்லியம்ஸ், Lincolnshire -லில் உள்ள ப்ரேஃபோர்டு பூல் பகுதியில் அமைந்திருக்கும் IV பப்பில் செஃப்பாக பணியாற்றி வந்துள்ளார். அவருக்கு விடுமுறை சம்பளமாக வெறும் ரூ. 10,000-த்தை பப் நிர்வாகிகள் வழங்கியதால் ஏமாற்றமடைந்த டாம் மிகுந்த எரிச்சலடைந்துள்ளார். இதனால் நிர்வாகத்தில் கடுமையான வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளார். இரண்டு நாளைக்கு பிறகு அக்டோபர் 11, 2022 அன்று பப்புக்கு வந்த டாம், ஒரு ஜாரில் அடைத்து வைத்திருந்த கரப்பான்பூச்சிகளை திறந்து பப் கிச்சனுக்குள் ஓடவிட்டுள்ளார். பிற விலங்குகளுக்கு உணவாக அளிக்க ஜார்களில் கரப்பான்பூச்சிகளை ஏற்கனவே அவர் வைத்திருக்கிறார். ஆத்திரத்தில் அதனை திறந்து வெளியே விட்டுள்ளார்.
மேலும், அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்த கரப்பான்பூச்சிகளை தொடக்கூடாது எனவும் தனது சக ஊழியர்களை எச்சரித்துள்ளார். இதனையடுத்து பப் மேனேஜர்கள் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் மற்றும் பூச்சி கட்டுப்பாடு வாரியத்தை தொடர்புகொண்டு அவர்கள் உதவியுடன் பப்பை சுத்தம் செய்துள்ளனர். இதனால் சுத்தம்செய்யும் வரை பப்பிற்கு விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. பப் முழுவதும் சுத்தம்செய்ய 22,000 பவுண்டுகள் ஆகியுள்ளது. அதாவது இந்திய ரூபாயில், கிட்டத்தட்ட 22 லட்சமாம்.
இதுகுறித்த விசாரணைக்கு நவம்பர் 21ஆம் தேதி ஆஜராக உத்தரவிட்டும் டாம் ஆஜராகவில்லை. அதேசமயம் தான் செய்த கிரிமினல் குற்றத்தை எண்ணி வருந்துவதாக நவம்பர் 28ஆம் தேதி குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து டாமின் வழக்கறிஞர் ஜெரேமி ஜேனஸ் கூறுகையில், “இது ஆதரவாக வாக்குவாதம் செய்ய தேர்ந்தெடுக்கப்படும் மோசமான வழக்குகளில் ஒன்று. தனக்கு இழப்பீடு ஏற்பட்டதாக உணர்ந்த அவர், அதனை ஈடுகட்டுவதாக எண்ணி, கோபத்தில் தவறான முடிவை எடுத்துவிட்டார். தொடர்ந்து விசாரணையில் கலந்துகொள்ள வேண்டாம் என முடிவெடுத்தது மற்றொரு தவறான முடிவு” என்று கூறினார். இதனையடுத்து டாம் வில்லியம்ஸுக்கு 17 மாதங்கள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM