சென்னை: சென்னையில் இன்று (ஜன.25) ஒரே நாளில் 59.3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ள காவல் துறையினர், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த 3 பெண்கள் உள்பட 9 பேரை கைது செய்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஒரு நான்கு சக்கர லோடு வாகனம், ஒரு இரு சக்கர வாகனம் மற்றும் 4 செல்போன்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இதுதொடர்பாக சென்னைப் பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள தகவல்: சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், உத்தரவிட்டதின்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் துறையினர் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, முத்தியால்பேட்டை (N-3) காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் இன்று (25.01.2023) காலை ஸ்டான்லி ரவுண்டானா அருகே வாகனத் தணிக்கை பணியில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியே சந்தேகத்திற்கிடமாக வந்த Ashok Leyland Dost லோடு வாகனத்தை நிறுத்தி விசாரணை செய்து மேற்படி வாகனத்தை சோதனை செய்த போது, வாகனத்தில் சட்டவிரோதமாக கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

காவல்துறையினர் பறிமுதல் செய்த லோடு வாகனம்

அதன்பேரில் லோடு வாகனத்தில் ஆந்திராவிலிருந்து சட்ட விரோதமாக கஞ்சா கடத்தி வந்த, ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களைச் சேர்ந்த அனில்குமார் (24), உப்பலப்பட்டி அன்ஜி (34), கொண்டா ரெட்டி(32) ஆகிய 3 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 44 கிலோ கஞ்சா, 3 செல்போன்கள் மற்றும் 1 Ashok Leyland Dost லோடு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதே போல, வண்ணாரப்பேட்டை (H-1) காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் துறையினர் இன்று (25.01.2023) சீனிவாசபுரம், ரயில்வே கேட் அருகே கண்காணித்து அங்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த துர்கா தேவியை (27), சென்னை என்பவரை கைது செய்தனர். போலீசாரின் விசாரணையில் துர்கா தேவி அளித்த தகவலின் பேரில் சந்தோஷ் (24), அவரது மனைவி ஆனந்தி (எ) ஹேமா (20), செல்வம் (எ) சிட்டிசன் (21), அவரது தாய் உமா (39) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 12.5 கிலோ எடை கொண்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா

புனித தோமையர் மலை, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் இன்று (25.01.2023) காலை எம்.ஜி.ஆர் நகர் காமராஜர் சாலை, டாக்டர் காணு நகர் மெயின் ரோடு சந்திப்பு அருகே கண்காணித்து, அங்கு இருசக்கர வாகனத்துடன் நின்றிருந்த ஒரு நபரிடம் விசாரணை செய்தபோது, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார்.

சந்தேகத்தின்பேரில், அவரை சோதனை செய்தபோது, அவர் கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அதன்பேரில் சட்டவிரோதமாக கஞ்சா மறைத்து வைத்திருந்த சின்னதுரை (35), என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 2.8 கிலோ கஞ்சா, 1 செல்போன் மற்றும் குற்ற சம்பவத்திற்கு பயன்படுத்திய 1 இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட சின்னதுரை மீது ஆந்திரா மாநிலத்தில் ஏற்கெனவே 2 கஞ்சா வழக்கு உள்ளது தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட மேற்படி 9 நபர்களும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *