திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் சமூக ஆர்வலர் கொலை வழக்கில் அதிமுக பிரமுகர் உட்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி அருகே ராஜிவ்காந்தி நகர் குடியிருப்பு பகுதியில் வசித்தவர் சமூக ஆர்வலர் ராஜ்மோகன் சந்திரா. இவர், திருவண்ணாலை கிரிவல பாதையில் சிங்க முக தீர்த்தம் அருகே கடந்த 02-07-2012-ம் தேதி வெட்டி கொலை செய்யப்பட்டார். நில அபகரிப்பு, கனிம வள கொள்ளைக்கு எதிர்ப்பு தெரிவித்தால் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து திருவண்ணாமலை நகர காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, திருவண்ணாமலை பெரும்பாக்கம் சாலையில் வசிக்கும் நகராட்சி கவுன்சிலராக இருந்த அதிமுகவைச் சேர்ந்த திருப்பதி பாலாஜி என்கிற வெங்கடேசன்(38), அவரது தந்தை காசி என்கிற வீராசாமி, சகோதரர் செல்வம், அவரது மனைவி மீனாட்சி(32) மற்றும் வட ஆண்டாப்பட்டு கிராமத்தில் வசிக்கும் முருகன்(32), சடையன்(30), தென்பள்ளிப்பட்டு கிராமத்தில் வசிக்கும் சந்திரசேகரன்(29), ஆணாய்பிறந்தான் கிராமத்தில் வசிக்கும் ஐயப்பன்(32), விஜயராஜ்(41), செங்குணம் கிராமம் சுப்ரமணி(40) ஆகிய 10 பேரை கைது செய்தனர். இவர்களில் வீராசாமி, செல்வம் ஆகியோர் உயிரிழந்துவிட்டனர்.
இந்த வழக்கின் மீதான விசாரணை திருவண்ணாமலை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. சாட்சிகள் விசாரணை முடிந்து நேற்று (23-ம் தேதி) தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் திருப்பதி பாலாஜி என்கிற வெங்கடேசன், மீனாட்சி உட்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி இருசன் பூங்குழலி தீர்ப்பு வழங்கினார். இதையடுத்து காவல்துறையினரின் பலத்த பாதுகாப்புடன் 8 பேரும் அழைத்து செல்லப்பட்டு, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
2 முறை குண்டர் சட்டம்: திருவண்ணாமலை, பெரும்பாக்கம் சாலை எம்ஜிஆர் நகரில் வசிப்பவர் அதிமுக முன்னாள் கவுன்சிலர் திருப்பதி பாலாஜி என்கிற வெங்கடேசன். அதிமுக முன்னாள் அமைச்சரின் தீவிர ஆதரவாளரான இவர், மண் மற்றும் மணல் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து, தொழிலதிபர்கள், நில வணிகர்களை மிரட்டி பணம் பறித்தல், இயற்கை வளங்களை கொள்ளையடித்தல் உட்பட சமூக விரோத செயலில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு உள்ளது. கொலை, கொலை முயற்சி வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரபல ரவுடியாக வலம் வந்த இவர் மீது, திருவண்ணாமலை கிராமிய காவல் நிலையத்தில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் குற்ற சரித்திர பதிவேடு பராமரிக்கப்படுகிறது. திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் 10 வழக்குகளும், கிராமிய காவல் நிலையத்தில் 9 வழக்குகளும், கிழக்கு காவல் நிலையத்தில் 2 வழக்குகள் என 21 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சமூக ஆர்வலர் கொலை வழக்கில் ஒரு முறையும், கனிம வள கொள்ளை வழக்கில் ஒரு முறையும் என இரண்டு முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.