புதுச்சேரியில் 21 வயதுக்குமேல் 55 வயதுக்குள் இருக்கும், அரசின் எந்தவிதமான உதவித்தொகையும் பெறாத, வறுமைகோட்டுக்கு கீழ் இருக்கும் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகையாக வழங்கப்படும் என்று 2022-23 பட்ஜெட் உரையில் அறிவித்திருந்தார் முதல்வர் ரங்கசாமி. அந்தத் திட்டத்தின் தொடக்கவிழா இன்று நடந்தது. திட்டத்தை தொடங்கி வைத்த துணைநிலை ஆளுநர் தமிழிசை, “பெண்கள் கையில் இருக்கும் தொகை குடும்பத்துக்கு உதவியாக இருக்கும். பிரதமர் அலுவலக நிதி ஆய்வு அறிக்கையில், நாட்டிலேயே வாழ்வாதாரம், சுகாதாரம், குடிநீர் வசதி ஆகியவற்றில் புதுச்சேரிதான் முதலிடம். இது ஒன்றரை ஆண்டுக்கால கணக்கெடுப்பு. புதுச்சேரி முன்னேறி வருகிறது. நிதி நிலை அறிக்கையில் குறிப்பிடாமல், பட்ஜெட் உரைக்கு பின், மாதம் ரூ.1,000/- திட்டம் தற்போது தொடங்கப்படுகிறது. இந்த அரசு அறிவிக்காத திட்டங்களையும் செய்கிறது.
சில அரசுகள் அறிவித்த திட்டங்களைக்கூட செய்யவில்லை. எந்த மாநிலத்துக்கும் குடியரசுத்தினத்தையொட்டி இதுபோல் பரிசு கிடைத்ததில்லை” என்றார். அவருக்கு முன்னர் பேசிய முதல்வர் ரங்கசாமி, “பெண்களுக்கு பாதுகாப்பு இருக்க வேண்டும் என்ற காரணத்துக்காக, பெண்கள் பெயரில் சொத்துகளை வாங்கினால் பத்திரப்பதிவு செலவை 50 சதவிகிதமாக குறைப்போம் என்று அறிவித்து அதனை நடைமுறைப்படுத்தினோம். அதனால் அரசுக்கு இழப்புதான் என்றாலும், பெண்களுக்கு மிகுந்த பயன் கிடைத்திருக்கிறது. தற்போது அனைவருக்கும் உதவித்தொகை கிடைக்கும் என்ற சூழலில், உதவி ஏதும் கிடைக்காதோருக்கு தற்போது மாதம் ரூ.1,000/- திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.