யூனியன் பிரதேசங்களில் உள்ள மின்துறைகளை தனியார் மயமாக்குவதற்கு முடிவெடுத்த மத்திய அரசு, அதற்கான பணிகளை துரிதப்படுத்தி வருகிறது. அதன்படி புதுச்சேரியில் மின்துறை தனியார்மயமாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த காங்கிரஸ் ஆட்சியில் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதையடுத்து புதுச்சேரி மின்துறையில் பணியாற்றும் பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் சங்கத்தினர் ஒருங்கிணைந்து மின்துறை தனியார்மய எதிர்ப்பு போராட்டக்குழுவை ஏற்படுத்தி, பல்வேறு போராட்டங்களை நடத்திவருகின்றனர்.
ஆனால் காங்கிரஸ் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க கூட்டணி அரசு பொறுப்பேற்ற பிறகு மின்துறையை தனியார்மயமாக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது.
அது தொடர்பாக சமீபத்தில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, ஊழியர்களின் கருத்துகளையும் கேட்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் போராட்டக்குழுவினர் அந்தக் கருத்துக்கேட்பு கூட்டத்தை புறக்கணித்தனர். இதனிடையே தனியார்மயம் தொடர்பான வரைவு அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்பட்டு டெண்டரும் விடப்பட்டது. அதையடுத்து அரசின் நடவடிக்கையை கண்டித்து மின்துறை ஊழியர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
ஆனாலும் தனியார்மயமாக்குவதில் அரசு பிடிவாதம் காட்டியதால், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்தனர் மின்துறை ஊழியர்கள். ஒட்டுமொத்த மாநிலமும் இருளில் மூழ்கியதால் மக்கள் வீதிகளில் இறங்கி போராட ஆரம்பித்தனர். மாநிலம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவியதையடுத்து, முதல்வர் ரங்கசாமி ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதால் வேலை நிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டது.