பிரான்சில் நடைபெற்ற போராட்டத்தின்போது இளைஞர் ஒருவரின் விதைப்பையை போலீசார் சிதைத்துள்ளனர்.

பிரான்சில் ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிராக அரசு ஊழியர்கள் போராடி வருகின்றனர். அங்கு, அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது தற்போது 62ஆக உள்ளது. இதனை 64 ஆக உயர்த்த கடந்த சில ஆண்டுகளாகவே அதிபர் இமானுவேல் மேக்ரான் அரசு முயன்று வருகிறது. இந்த மாத தொடக்கத்தில் பிரதமர் எலிசபெத் போர்ன் பரிந்துரைத்த திட்டங்களின்படி, 2027ஆம் ஆண்டு ஒருவர் தனக்குரிய முழுமையான ஓய்வூதியம் பெறுவதற்கு 43 ஆண்டுகள் பணி செய்திருக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைக் கண்டித்து பிரான்ஸ் முழுவதும் கடந்த ஜனவரி 20ஆம் தேதி போராட்டம் நடைபெற்றது. பல இடங்களில் போராட்டகாரர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி விரட்டியடிக்க முயன்றனர். அப்போது இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் போராட்டம் களம் போர்க்களமாக மாறியது. அப்போது இளைஞர் ஒருவரை போலீசார் தாக்கியதில், அவர் தன்னுடைய விதைப்பையை இழந்துள்ளார்.

image

இதுகுறித்து நேற்று (ஜனவரி 22) அந்நாட்டு லிபரேஷன் என்ற செய்தித்தாள் வெளியிட்டுள்ள தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. எஸ்.இவான் என்ற 26 வயது இளைஞரான அவர், பொறியாளராக இருப்பதாகவும் அது தெரிவித்துள்ளது. இந்தப் போராட்டத்தில் அவர் கலந்துகொண்டபோது போலீசாரிடம் சிக்கியுள்ளார். அங்கு நடந்த கலவரத்தை, இவான் தன்னுடைய கேமராவில் படம் பிடித்துள்ளார். இதைப் பார்த்த போலீஸ்காரர் ஒருவர், இவானைப் பிடித்து தரையில் தள்ளியுள்ளார். அப்போது மற்றொரு போலீஸ்காரர் லத்தியால் அவரது இடுப்பில் தாக்கியதாகத் தெரிகிறது. இந்தத் தாக்குதலில்தான் அவரது விதைப்பை பலமாகத் தாக்கப்பட்டுள்ளது என அந்த செய்தித்தாளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

image

இதுகுறித்து இவானின் வழக்கறிஞர் லூசி சைமன், “போலீசார் அவரைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதனால் அவரது விதைப்பை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த காயத்திலிருந்து என்னுடைய நபர் மீளவில்லை. இதற்காக, அவர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். இவரைத் தாக்கிய போலீசார் இன்னும் கைது செய்யப்படவில்லை. இளைஞரின் விதைப்பை சிதைக்கப்படுவதற்குக் காரணமாயிருந்த போலீசார் மீது வழக்கு தொடரப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *