மாலை கருவறை இறைக் குடங்கள் அலங்கரித்தல் நடைபெற்றது. ஆனந்த விநாயகர், கைலாசநாதர், மலைக்கொழுந்தம்மன், மலைக்கொழுந்தீஸ்வரர், வள்ளி தெய்வானை, சண்முகர், சின்ன குமாரர், தண்டாயுதபாணி சுவாமி, தங்க விமானம், ராஜகோபுரம், சண்டிகேஸ்வரர் சுவாமிகள் குடங்களில் எழுந்தருளினர். மேலும் மூலஸ்தான கும்பாபிஷேகம் நடைபெற்றது.
மேலும் முதல் யாக பூஜை 83 யாக வேள்விக் குண்டங்களில் 150 சிவாசார்யர்கள் வேத மந்திரம் முழங்க நடைபெற்றது. கோயில் படிபாதையில் உள்ள சுவாமிகளின் திருமேனியைச் சுற்றி அஷ்டபந்தன மருந்து சாற்றும் நிகழ்வு நடந்தது.
இன்று மலைக்கோயில் ஏறுவதற்காக 72 பேர் அமரக்கூடிய வகையில் புதிதாக 1 கோடி ரூபாய் மதிப்பிலான மின் இழுவை ரயில் பெட்டிகள் வழங்கப்பட்டன. இதில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, பழநி எம்.எல்.ஏ., ஐ.பி.செந்தில்குமார், அறங்காவலர் குழுத்தலைவர் சந்திரமோகன், கோயில் இணை ஆணையர் நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
27 -ம் தேதிவரை திருவீதிக் குடமுழுக்கு நினைவரங்கத்தில் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை அன்னதானத் திட்டம் நடைபெறுகிறது. அதேபோல 28 -ம் தேதிவரை தினந்தோறும் இரவு 7 மணிக்கு நடைபெறும் தங்கதேர் சுவாமி உலா வருதல் நிகழ்வு நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.