International
oi-Halley Karthik
கீவ்: உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஆண்டு போர் தொடுத்த நிலையில் இந்த போர் தொடங்கி 11 மாதங்கள் முடிந்துள்ளது. போரினால் தற்போது வரை உயிரிழந்துள்ள பொதுமக்களின் எண்ணிக்கை குறித்து ஐநா வெளியிட்டிருக்கும் தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு தொடக்கத்தில் மிகவும் பரபரப்பான சம்பவங்கள் நடந்தாலும் உலகம் முழுவதும் பேசுபொருளான சம்பவம் ரஷ்யா-உக்ரைன் போர்தான். 1990ல் சோவியத் ரஷ்யா உடைவதற்கு முன்னர் அப்போதைய அமெரிக்கா சோவியத்துடன் ஒரு ஒப்பந்தம் போட்டுக்கொண்டது. இந்த ஒப்பந்தத்தின்படி அமெரிக்கா கிழக்கு நோக்கி தனது நேட்டோ படைகளை விரிவுபடுத்தக்கூடாது என்று கூறப்பட்டது. ஆனால் இந்த ஒப்பந்தம் மீறப்பட்டது.
1949ம் ஆண்டு நார்வே, ஐஸ்லாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளில் இருந்த நேட்டோ 1952-1982 என 30 ஆண்டுகளில் ஸ்பெயின், ஜெர்மனி, துருக்கி என விரிவடைந்தது. அதன்பின்னர் 1990ம் ஆண்டு மட்டும் போலாந்து, பெலாரஸ், லாத்வியா, லிதுவேனியா, ஈஸ்டோனியா, ஹங்கேரி போன்ற நாடுகளில் தனது கிளையை பரப்பியது அமெரிக்காவின் நேட்டோ. கடைசியாக மீதமிருந்த செர்பியா, ருமானியா, பல்கேரியா, ஸ்லோவாக்கியா போன்ற நாடுகளை 2004-2009 வரை கைப்பற்றியது.
மீண்டும் உக்கிரம் அடையும் ‘உக்ரைன் ரஷ்யா போர்’.. மழை போல பொழிந்த ஏவுகணைகள்.. அதிர்ந்த கீவ் நகரம்!
ராணுவ நடவடிக்கை
இறுதியாக முன்னாள் சோவியத் நாட்டில் முக்கியமான நாடான உக்ரைனை இதில் இணைக்க திட்டமிட்டது. இந்த படையெடுப்புக்கு ரஷ்யா தொடக்கம் முதல் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இதில் நேட்டோவில் இணைய ஒப்புக்கொண்டார். இப்படி இணைந்தால் நேட்டோ படைகள் உக்ரைன் எல்லையில் நிற்கும். உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையில் எந்த நாடும் இல்லை. எனவே இது ரஷ்யாவுக்கு நேரடி பாதுகாப்பு அச்சுறுத்தல். எனவே இதனை தாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரியில் உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கையை அறிவித்தார் ரஷ்ய அதிபர் புதின்.
உயிரிழப்பு
இதனை எதிர்பார்க்காத உக்ரைன் பலத்த சேதத்தை சந்திக்க தொடங்கியது. அந்நாட்டிலிருந்து இந்தியாவை சேர்ந்த மாணவர்கள் உட்பட பலரும் வெளியேறினர். இதனையடுத்து போர் உக்கிரமடைய தொடங்கியது. ரஷ்ய படைகள் கொஞ்சம் கொஞ்சமாக உக்ரைனை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர தொடங்கின. ஆனால் அமெரிக்காவும், பிரிட்டனும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து தங்களது படைகளை உக்ரைனுக்கு ஆதரவாக அனுப்பியது. இதனால் உத்வேகமடைந்த உக்ரைன் பதுங்குவதை தவிர்த்து பாய தொடங்கியது. தாக்குதல்கள் இரு தரப்பிலும் பலமடைய தொடங்கிய நிலையில், ஏராளமான ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
பொதுமக்கள்
பொதுமக்கள் தரப்பிலும் பலர் பலியாகினர். தற்போது இந்த விவரங்களை ஐநா வெளியிட்டுள்ளது. அதன்படி சுமார் 18,358 பொதுமக்கள் இந்த போரினால் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை இறுதியானது இல்லையென்றும் உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் என்றும் ஐநா அச்சம் தெரிவித்துள்ளது. இதுமட்டுமல்லாது பல்லாயிரக்கணக்கான உயிர்கள் ஆபத்தில் இருப்பதாகவும் எனவே போரை கைவிட வேண்டும் என்றும் ஐநா மனித உரிமைகள் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த உயிரிழப்புகளை பொறுத்த அளவில், சில இடங்களிலிருந்து இன்னும் தகவல்கள் பெற்படவில்லயென்றும், அவ்வாறு தாமதமாக பெறப்படும் தகவல்களை சேர்த்தால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
1 லட்சம் வீரர்கள்
ஐநா வெளியிட்டுள்ள தகவலின் படி மரியுபோல் (டொனெட்ஸ்க் பகுதி), இசியம் (கார்கிவ் பகுதி), லைசிசான்ஸ்க், போபாஸ்னா மற்றும் சீவிரோடோனெட்ஸ்க் (லுஹான்ஸ்க் பகுதி) போன்ற பகுதிகளில் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. மறுபுறம் இரு நாட்டு தரப்பிலும் சுமார் 1 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழந்திருக்கலாம் என்ற அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை அச்சம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
English summary
The United Nations has reported that more than 18,000 civilians have been killed in the 11 months since Russia launched a war on Ukraine last year.
Story first published: Tuesday, January 24, 2023, 19:49 [IST]