கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சுஹைல் (29). இவர் சுஹைல் விலாகர் மற்றும் சைபர் தமிழா என்ற பெயரில் யூடியூப் சேனல்களை நடத்தி வருகிறார். இவரின் சேனல்களை சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பின்தொடர்கின்றனர். இவரின் மனைவி பாபினா (28). இந்தத் தம்பதிக்கு ஏழு மாதத்தில் ஓர் பெண் குழந்தை உள்ளது.
இவர்கள் சமீபத்தில் கே.ஜி சாவடி பிச்சனூர் பகுதியில் ஓர் புதிய வீடு கட்டி குடிபெயர்ந்துள்ளனர். வீட்டில் நடக்கும் அன்றாட குடும்ப நிகழ்வுகளை வீடியோவாக வெளியிட்டு வந்துள்ளார்.
அப்போது, தனது புதிய வீட்டை ஹோம் டூராக சுற்றிக் காட்டியும் வீடியோ வெளியிட்டுள்ளார். யூட்யூப் மூலம் கிடைக்கும் வருவாயில் தான் வீடு, இரண்டு கார்கள், மற்றும் இரு சக்கர வாகனங்களையும் வாங்கி வசதியுடன் வாழ்வதாக தெரிவித்துள்ளார். இதனிடையே நேற்று முன்தினம் காலை சுஹைலின் வீட்டுக் கதவை தட்டி மர்ம நபர் உள்ளே சென்றுள்ளார்.
பிறகு மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளார். சுதாரித்துக் கொண்ட சுஹைல், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அந்த நபரை அதே பகுதியில் மடக்கி பிடித்துள்ளார்.
பின்னர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். போலீஸ் விசாரணையில் பிடிபட்ட நபர் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த அனுராம் (25), என்பதும் தெரியவந்துள்ளது. “நான் சுஹைல் யூ-டியூப் சேனலின் சப்ஸ்க்ரைபர். சுஹைல் மிக குறுகிய காலத்தில் யூட்யூப் மூலம் அதிக பணம் சம்பாதித்துள்ளார். அதை மிக எளிதாக சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் புதுச்சேரியில் இருந்து வந்தேன்.
நள்ளிரவு சுஹைலின் வீட்டை அடைந்துவிட்டேன். இரவு முழுவதும் மொட்டை மாடியிலேயே படுத்துத் தூங்கிக் காலையில் வீட்டுக்குள் சென்றேன்.” என்று அனுராம் விசாரணையில் கூறியுள்ளார். போலீஸ் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.