
சென்னையை அலசி ஆராய்ந்து உலக வங்கி சொல்லியிருக்கும் முக்கிய தகவல்
சென்னை: சென்னை மாநகரை கடந்த இரண்டு ஆண்டு காலமாக நேரடியாக அலசி ஆராந்திருக்கும் உலக வங்கி, அதன் ஆய்வறிக்கையை வெளியிட்டிருக்கிறது.
அதன்படி, ஒரு நாளில் சென்னை மாநகர் முழுவதும் 100 சென்டி மீட்டருக்கு மேல் மழைப்பெய்தால், சுமார் 29 வழித்தடங்களில் சென்னை மாநகரப் பேருந்துகளை இயக்குவது சிரமம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுளள்து.
உலக வங்கியின் இந்த நேரடியாக கள ஆய்வு, கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது. இதில், சென்னையில் மழை பெய்தால், குளம்போல மாறிவிடும் 6 பேருந்துநிலையங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
உலக வங்கியின் இந்த ஆய்வில் கிடைத்திருக்கும் தகவலின்படி, திருவொற்றியூர் முதல் கோயம்பேடு வரையிலான 159ஏ பேருந்து வழித்தடம், 7எஃப் இயக்கப்படும் பாரிமுனை – அண்ணாநகர் என 29 வழித்தடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இது மட்டுமல்லாமல், சென்னையில் உள்ள வடபழனி, மந்தவெளி, வியாசார்பாடி, டி.நகர், அண்ணாநகர் மேற்கு, அம்பத்தூர் தொழிற்பேட்டை ஆகிய ஆறு பேருந்து நிலையங்களும், மழை பெய்தால் குளமாக மாறிவிடும் என்பதையும் அது மிகச் சரியாகக் கண்டுபிடித்துவிட்டது.
இந்த ஆய்வறிக்கையின் மூலம், சென்னையில் மழை வெள்ள பாதிப்புகளைக் குறைக்கும் வகையில் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும் என்பதற்காக சென்னை மாநகரின் ஒருங்கிணைந்த போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பின்படி, இப்பகுதிகளில் மழைநீர் வடிகால்வாய்களை அமைக்கவும், காவல்துறையினர், மாற்றுப் பாதைகளை உடனடியாக ஏற்பாடு செய்யவும் வழிவகைக் காணப்படும் என்றும் கூறப்படுகிறது.