சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த பட்டியல் சமூக இளைஞர் பொறியாளர் கோகுல்ராஜ். இவர், கடந்த 2015 -ம் ஆண்டு, ஜூலை மாதம், 24 -ம் தேதி நாமக்கல் மாவட்டம், தொட்டிபாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். கோகுல்ராஜ், கல்லூரியில் படிக்கும்போது சுவாதி என்ற பெண்ணைக் காதலித்ததாகவும், அவர்கள் இருவரும் 2015 ம் வருடம், ஜூலை மாதம் 23 – ம் தேதி திருச்செங்கோடு மலைக் கோவிலுக்கு வந்து இருந்த போது, கோகுல்ராஜ், யுவராஜ் தரப்பினரால் கடத்தப்பட்டதாகவும், இந்த விவகாரத்தில் கோகுல்ராஜ் ஆணவக்கொலை செய்யப்பட்டதாகவும் காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.
கோகுல்ராஜ் கொலை வழக்கு, உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில், மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கில், கைதான சேலம் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அருண், குமார் என்ற சிவகுமார், சதீஷ்குமார், ரகு என்ற ஸ்ரீதர், ரஞ்சித், செல்வராஜ், சந்திரசேகரன், பிரபு, கிரிதர் ஆகிய பத்து பேருக்கும் சாகும்வரை சிறை தண்டனை விதித்தும், ஐந்து பேரை விடுதலை செய்தும் மதுரை மாவட்ட நீதிமன்றம் கடந்த வருடம் மார்ச் 8-ம் தேதி தீர்ப்பளித்தது. இந்நிலையில், கோகுல்ராஜ் கொலை வழக்கில், மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றம் அளித்த இந்தத் தீர்ப்பை எதிர்த்து, யுவராஜ் உள்ளிட்ட பத்து பேரும், ஆயுள் தண்டனையை ரத்துசெய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.
அதேபோல, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சங்கர் உள்ளிட்ட ஐந்து பேர் சிறப்பு நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, கோகுல்ராஜின் உறவினர்களும், இந்த வழக்கை விசாரித்த சி.பி.சி.ஐ.டி. போலீஸ் தரப்பிலும் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கின் முக்கிய சாட்சியான சுவாதி பிறழ் சாட்சியமாக மாறினார். வீடியோ காட்சிகளைவைத்து நீதிபதிகள் விசாரித்தபோது, அவர் முன்னுக்குப்பின் முரணாகப் பதிலளித்ததால், விசாரணை நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் சுவாதி மாறி மாறி சாட்சியம் அளித்ததாகக் கூறி, நீதிமன்றமே தாமாக முன்வந்து அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவுசெய்தது. அதுசம்பந்தப்பட்ட விசாரணை, சுவாதி தாய்மையடைந்த நிலையில் இருப்பதால், அவர் கணவரிடம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கில் கோகுல்ராஜின் தாயார், அரசு தரப்பு, சி.பி.சி.ஐ.டி தரப்பு வாதங்கள் நிறைவடைந்தபடியால், இந்த வழக்கில் சிறையிலிருக்கும் யுவராஜ் உள்ளிட்ட மேல்முறையீடு செய்தவர்கள் தரப்பு வாதங்களுக்காக வழக்கு விசாரணையை 20-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்திருந்தனர். அதேபோல், கோகுல்ராஜ் கடைசியாக இருந்ததாக சி.சி.டி.வி காட்சிகளில் பதிவான நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் திருச்செங்கோட்டில் அமைந்திருக்கும் அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு நேரில் சென்று ஆய்வுசெய்ய உள்ளதாக நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.