புதுக்கோட்டை அருகே வெட்டன்விடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியம்மாள். சிறுவயது முதலே ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்பில் ஆர்வம் உள்ளவர், சடைபாண்டி என்ற பெயரில் ஜல்லிக்கட்டுக் காளை ஒன்றை வளர்த்து வருகிறார். தமிழகத்தில் நடக்கும் பெரும்பாலான ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் தனி ஆளாகவே கலந்துகொண்டு தன் சடைபாண்டி காளையை அவிழ்த்துவிடுகிறார். ஜல்லிக்கட்டுக் களத்தில் ஆக்ரோஷம் காட்டும் சடைபாண்டி, ஜல்லிக்கட்டு களங்களில் பிடிபடாத காளையாகவும் வலம் வருகிறது.
சடைபாண்டி களத்தில் ஆக்ரோஷம் காட்டினாலும், மாரியம்மாளிடம் ஆட்டுக்குட்டிபோல பணிந்து நிற்கிறது. வன்னியன்விடுதியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு தனி ஆளாக சடைபாண்டியை அழைத்துக்கொண்டு வீரநடை போட்டு வந்த மாரியம்மாளிடம் பேசினோம்…
“சின்ன வயசிலருந்தே எனக்கும், என் அண்ணனுக்கும் ஜல்லிக்கட்டுக் காளைகள் மீது ஈர்ப்பு அதிகம். அதனாலயே அப்பா, ஜல்லிக்கட்டு காளைகள் வாங்கி வளர்க்க ஆரம்பிச்சார். ஆரம்பத்துல அவர்தான் ஜல்லிக்கட்டு போட்டியில காளையை அவிழ்ப்பாரு.
என் அண்ணன் சடைபாண்டி கொஞ்ச வருஷத்துக்கு முன்னால இறந்துபோயிட்டான். அந்த நேரத்துலதான் அப்பா இந்தக் காளையை வாங்கிட்டு வந்தாரு. அண்ணனோட நினைவா, அந்தக் காளைக்கு `சடைபாண்டி’னு பேரு வச்சோம். அதுக்கு முன்னாடி எல்லாம் தூரத்துல இருந்துதான் காளையை ரசிப்பேன். சடைபாண்டி வந்ததுக்கு அப்புறம்தான் பக்கத்துல போய் கவனிக்க ஆரம்பிச்சேன். கிட்டத்தட்ட 6 வருஷமா இவனை பராமரிச்சுக்கிட்டு இருக்கேன். பிள்ளைக்குக் கொடுக்கிற மாதிரி தான் தீனி கொடுத்து வளர்க்குறேன். நானும் அவனும் ஒண்ணா பொறந்தவங்க மாதிரி. நான் என்ன சொல்றேனோ, என் பேச்சை அப்படியே கேட்பான். குழந்தைகள் எல்லாம்கூட அவன் மேல ஏறி விளையாடுவாங்க. அதேபோல, எல்லா ஊர் ஜல்லிக்கட்டுலயும் என்னாலதான் அவனை நிப்பாட்ட முடியும்.