தேனி அல்லிநகரம், பெரியகுளம், போடி, கம்பம், சின்னமனுார் நகராட்சிகள், கம்பம் பள்ளத்தாக்கில் உத்தமபாளையம் உட்பட அனைத்து பேரூராட்சி, ஊராட்சிகளிலும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.
ஆங்காங்கு, கூட்டம் கூட்டமாக ஊருக்குள் சுற்றித் திரிகின்றன. ஒரு சில நாய்கள் தெருவில் செல்லும் பொது மக்களை கடித்து வருகின்றன. ஒரு சில நாய்கள் டூவீலரில் பயணிப்போரை மிரட்டுவதால் பலர் விபத்துக்குள்ளாகி கை கால்களில் காயம் ஏற்படும் நிலை தொடர்கிறது.
தெரு நாய்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்ததற்கான காரணம் தெரியவில்லை.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நகராட்சிகளில் தெரு நாய்களை பிடித்து கருத்தடை செய்து, இனப்பெருக்கத்தை குறைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
ஆனால் தற்போது அப்பணிகள் கைவிடப்பட்டுள்ளன. இதுதவிர சமீபத்தில் ஆண்டிபட்டி, பெரியகுளம், போடி, தேனி பகுதிகளில் 30க்கும் மேற்பட்டோர் தெரு நாய் கடித்து பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் நகராட்சிகள், உள்ளாட்சிகள் சார்பில் கருத்தடை பணிகளை துவக்க வேண்டும். மேலும் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் சிறப்பு முகாம்கள் நடத்தி நாய்களுக்கு கருத்தடை செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என, பாதிக்கப்பட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement