ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரம் வாக்காளர்கள் கொண்ட இத்தொகுதியில் 52 இடங்களில் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது. இதற்காக 500 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்ளும் விவிபேடு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 238 வாக்குச்சாவடிகளில் 32 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறிப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வாக்குச்சாவடி அமைந்துள்ள இடம், கடந்த காலத்தில் வாக்குப்பதிவின்போது எழுந்த புகார், வாக்காளர்கள் எண்ணிக்கை உள்ளிட்டவைகளை கருத்தில் கொண்டு இது கண்டறிப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர். அப்பகுதியில் மத்திய பாதுகாப்பு படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும், ஒன்றிய அரசு ஊழியர்கள் தேர்தல் நுண் பார்வையாளராக நியமிக்கப்படுவார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.