விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளை உள்குத்தகைக்கு விட்டால், உரிமங்கள் ரத்து செய்யப்பட்டு, உரிமையாளர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என கலெக்டர் மேகநாதரெட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார். விருதுநகர் கலெக்டர் மேகநாதரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கை: பட்டாசு ஆலைகளை உரிமம் பெற்ற உரிமதாரர்கள் மட்டுமே நடத்த வேண்டும். விதிமுறைக்கு மாறாக வேறு நபர்களுக்கு உள்குத்தகைக்கு விடக்கூடாது. இது குறித்து அதிகாரிகள் ஆய்வில் தெரிய வந்தால், பட்டாசு ஆலை உரிமையாளர்கள் மீதும், உள்குத்தகைக்கு எடுத்தோர் மீதும் கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களின் உரிமங்கள் நிரந்தரமாக ரத்து செய்யப்படும். உயரதிகாரிகளால் பட்டாசு ஆலைகள் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்படும். அப்போது அதிகப்படியான பணியாளர்கள், அதிகளவில் வெடிபொருட்கள் இருப்பு வைத்தல், தயாரித்தல், உள்குத்தகை உள்ளிட்ட விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் பொதுமக்கள் உயிர், உடைமைக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கருதி வழக்கு பதியப்பட்டு, குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். சட்ட விரோதமாக வீடுகளிலும், அனுமதி பெறாத இடங்களிலும் கருந்திரி உள்பட பட்டாசு தயாரிப்பது கண்டறியப்பட்டாலும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். ஆலை பணியாளர்களுக்கு சிவகாசி தொழிலக பாதுகாப்பு பயிற்சி மையத்தில் பயிற்சி வழங்கப்படும். இதில் பங்கேற்காத தொழிற்சாலைகளின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆலை உரிமையாளர்கள் விதிமுறைகளை கட்டாயம் பின்பற்றி விபத்தில்லாத நகரை உருவாக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.* பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வுவிருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே கணஞ்சாம்பட்டி கிராமத்தில், சிவகாசியைச் சேர்ந்த மாயக்கண்ணனின் பட்டாசு ஆலையில் கடந்த 19ம் தேதி நடந்த வெடி விபத்தில் சாத்தூரைச் சேர்ந்த முனீஸ்வரி (32), சங்கர் (60) ஆகியோர் சம்பவ இடத்தில் இறந்தனர். தாயில்பட்டியைச் சேர்ந்த மாரிமுத்து, சாத்தூரைச் சேர்ந்த கருப்பசாமி உள்பட 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சாத்தூர், சிவகாசி மற்றும் மதுரை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், மதுரை அரசு மருத்துவமனையில் தாயில்பட்டி மாரிமுத்து (55), சாத்தூர் அமீர்பாளையத்தை சேர்ந்த கருப்பசாமி (26) ஆகியோர் நேற்று இறந்தனர். இதனால், பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.