India
oi-Jackson Singh
போபால்: பாஜகவில் விரைவில் இணைந்துவிடுமாறும், இல்லையென்றால் ஒவ்வொரு காங்கிரசார் வீட்டிற்கும் புல்டோசர் வரும் எனவும் மத்தியப் பிரதேசத்தில் அமைச்சர் ஒருவர் வெளிப்படையாக மிரட்டும் வகையில் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சரின் இந்த பேச்சுக்குக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், அமைச்சரின் பேச்சு மூலம் பாஜகவின் உண்மை முகம் வெளிப்பட்டுவிட்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இத்தனை கண்டனங்கள் வந்துள்ள போதிலும், “நான் என்ன தவறாகப் பேசிவிட்டேன்” என அந்த அமைச்சர் கேள்வியெழுப்பியுள்ளார்.
“புல்டோசர் பாபா.. இந்துக்களின் இதய அரசன்!” மோடி கோட்டையில் யோகி படை – குஜராத்தில் வீசும் உபி வாடை
‘புல்டோசர்’ அரசியல்
உத்தரபிரதேசத்தில் கொலை செய்வது, சிறுமிகளைப் பலாத்காரம் செய்வது போன்ற கொடிய குற்றங்களில் ஈடுபடுவோரின் வீடுகளை புல்டோசரால் இடித்து தள்ளும் நடவடிக்கையில், கடந்த ஓராண்டுக்கும் மேலாக முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு ஈடுபட்டு வருகிறது. இதற்கு ஒருபுறம் வரவேற்பு இருந்தாலும், மறுபுறம் அரசியல் காழ்ப்புணர்ச்சியாலும் எதிர்க்கட்சியினர் மீது இந்த புல்டோசர் நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த புல்டோசர் அரசியல், உத்தரப்பிரதேசத்தில் இருந்து பாஜக ஆளும் மற்ற மாநிலங்களுக்கும் பரவி வருகிறது.
மிரட்டிய அமைச்சர்
அந்த வகையில், பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்திலும் இவ்வாறு புல்டோசர்களை கொண்டு குற்றவாளிகளின் வீடுகளை இடிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து வருகின்றன. இதனை முதல்வர் சிவராஜ் சிங் சவுஹான் பல இடங்களில் பெருமையாகவும் கூறி வருகிறார். இந்நிலையில், மத்தியப் பிரதேசத்தில் இந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு பாஜக சார்பில் தேர்தல் பிரச்சார கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மாநில பஞ்சாயத்துத் துறை அமைச்சர் மகேந்திர சிங் சிசோடியா கலந்துகொண்டு பேசினார்.
“புல்டோசர் வரும்”
அவர் பேசுகையில், “மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. ஆனாலும், காங்கிரஸார் சிலர் மெத்தனப்போக்கில் இருக்கிறார்கள். எப்படியும் இந்த தேர்தலிலும் பாஜகதான் வெற்றி பெறப் போகிறது. இது காங்கிரஸாருக்கும் நன்றாகத் தெரியும். அவர்களுக்கு நாங்கள் ஒரு வாய்ப்பு தருகிறோம். பாஜகவுடன் மெல்ல இணைந்துவிடுங்கள். இல்லையெனில், அடுத்து அமையும் பாஜக ஆட்சியில் ஒவ்வொரு காங்கிரஸாரின் வீட்டுக்கு புல்டோசர் வரும்” என்றார்.
“என்ன தவறாகக் கூறிவிட்டேன்?”
அமைச்சர் மகேந்திர சிங் சிசோடியாவின் இந்த மிரட்டல் பேச்சுக்குக் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. எனினும், தான் எதுவும் தவறாகப் பேசவில்லை என மகேந்திர சிங் சிசோடியா கூறியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான் என்ன தவறாகக் கூறிவிட்டேன்.. மற்ற கட்சியினரை எங்கள் கட்சியில் இணையும்படி கூறுவது தவறா? எல்லா இடத்திலும் தவறு செய்கிறவர்கள் இருக்கிறார்கள். காங்கிரஸிலும் அதுபோன்றவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் வீட்டிற்குத்தான் புல்டோசர் வரும் என்று நான் கூறினேன். குற்றம் உள்ள நெஞ்சம்தான் குறுகுறுக்கும் என்பார்கள். காங்கிரசார் தற்போது பேசுவதை பார்த்தால் அப்படிதான் இருக்கிறது” என்றார்.
English summary
A minister in Madhya Pradesh has openly threatened to join the BJP or else a bulldozer will come to every Congressmen house, which has caused a lot of controversy.
Story first published: Saturday, January 21, 2023, 23:16 [IST]