திருவண்ணாமலை: ஆரணி அமமுக நிர்வாகி கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த கூலிப்படையைச் சேர்ந்த மேலும் 3 பேரை காவல்துறையினர் நேற்று கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கொசப்பாளையம் பகுதியில் வசித்தவர் அமமுக மாவட்ட அவைத் தலைவர் கோதண்டம்(68). பட்டு சேலை, நில வணிகம் மற்றும் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்துள்ளார். கடந்த 5-ம் தேதி செய்யாறு செல்வதாக கூறி, வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இது குறித்து ஆரணி நகர காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத் தினர். இதில், ரூ.1.25 கோடி கடன் தொகையை திருப்பி கேட்டதால் ஆத்திரமடைந்த ஆகாரம் கிராமத்தில் வசிக்கும் சரவணன் (33) என்பவர் கூலிப்படை மூலம் கோதண்டத்தை கொலை செய்துள்ளது தெரியவந்தது. கூலிப்படைக்கு ரூ.10 லட்சம் வழங் கப்பட்டுள்ளது.
மேலும், ஆந்திர மாநிலம் சத்தியவேடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தெலுங்கு கங்கை கால்வாயில் வீசப்பட்டிருந்த அவரது உடலை, அடையாளம் தெரியாதவர் என்ற அடிப்படையில் புதைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. பின்னர், உடலை தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்து, குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டது. நில வணிகம் தொடர்பாக பேச வேண்டும் என கோதண்டத்தை காரில் கடத்தி சென்று, கழுத்தை நெரித்து கொலை செய்து கால்வாயில் வீசி உள்ளனர்.
இதையடுத்து காணாமல் போனதாக பதிவு செய்யப் பட்டிருந்த வழக்கை, கொலை வழக்காக மாற்றம் செய்து ஆகாரம் கிராமத்தில் வசிக்கும் சரவணன் (33), அவரது ஓட்டுநரான அருணகிரிசத்திரத்தில் வசிக்கும் குமரன் (37), சென்னை அடுத்த குன்றத்தூரில் வசிக்கும் கூலிப் படையினர் குட்டி என்கிற தணிகா சலம் (44), நேருஜி (32) ஆகிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்திருந்தனர்.
மேலும், கூலிப்படையைச் சேர்ந்த 3 பேரை தேடி வந்தனர். இதில் கிடைத்த தகவலின் பேரில், ஆந்திர மாநிலம் சத்தியவேடு பகுதியில் வசிக்கும் தர் (34), சென்னை கும்மிடிபூண்டியில் வசிக்கும் வினோத் (24), வளசர வாக்கத்தில் வசிக்கும் வீரமணி (31) ஆகிய 3 பேரை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.