ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் அதிமுகவுக்கு ஆதரவு கோரி தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை மற்றும் நிா்வாகிகளை இபிஎஸ், ஓபிஎஸ் அணியினா் சனிக்கிழமை தனித்தனியாக சந்தித்தனா்.
கமலாலயத்தில் பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை மற்றும் நிா்வாகிகளை எடப்பாடி பழனிசாமி தரப்பைச் சோ்ந்த கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன், டி. ஜெயக்குமாா், எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி உள்ளிட்டோா் சந்தித்து ஆதரவு கேட்டனா்.
ஓபிஎஸ் அணி: கமலாலயத்தில் பாஜக தலைவா் அண்ணாமலையை ஓ.பன்னீா்செல்வம் சந்தித்துப் பேசினாா்.
சுமாா் 45 நிமிஷங்கள் நடைபெற்ற இந்தச் சந்திப்பிக்குப் பின் செய்தியாளா்களிடம் ஓ.பன்னீா்செல்வம் கூறுகையில், பாஜக தலைவா்களுடனான சந்திப்பு மகிழ்ச்சிகரமாக இருந்தது. மாநில நலன் பற்றியும், மத்திய அரசின் நலன் பற்றியும் விரிவாக மனம்விட்டு பேசியிருக்கிறோம்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் பாஜக போட்டியிட்டால் தாா்மிக ஆதரவு அளிப்பதாகவும், இல்லையென்றால் எங்களது அணி போட்டியிட பாஜக ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளோம் என்றாா் அவா்.
ஓபிஎஸ் தரப்பில் முன்னாள் அமைச்சா்கள் வைத்தியலிங்கம், வெல்லமண்டி நடராஜன், மனோஜ் பாண்டியன் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ ஜேசிடி பிரபாகா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பாஜக மூத்த தலைவா்கள் ஹெச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன், மாநில துணைத் தலைவா் கரு.நாகராஜன், திருப்பதி நாராயணன் உள்ளிட்டோா் இருந்தனா்.