ராய்பூர்: இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.
இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி ராய்பூரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி இந்திய அணியின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 34.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 108 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக முகமது ஷமி 3, ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். நியூசிலாந்து அணி தரப்பில் கிளென் பிலிப்ஸ் 36, பிரேஸ்வெல் 22, சான்ட்னர் 27 ரன்களும் எடுத்தனர்.
இதையடுத்து 109 ரன்கள் எடுத்தால் என்ற எளிய இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் ஷர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா 51 ரன்கள் எடுத்த நிலையில் ஷிப்லி பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். இதையடுத்து களமிறங்கிய விராட் கோலி 11 ரன்கள் எடுத்த நிலையில் முதல் ஒருநாள் போட்டியை தொடர்ந்து மீண்டும் சாண்ட்னர் பந்துவீச்சில் அவுட் ஆனார்.
மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இஷான் கிஷான் 8 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி 2 விக்கெட்களை மட்டுமே இழந்து 20.1 ஓவர்களில் 111 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.