1948 ஆம் ஆண்டு இங்கிலாந்திடம் இருந்து விடுதலை பெற்ற இலங்கை கடந்த ஆண்டு மிக மோசமான பொருளாதார சிக்கலை சந்தித்தது. கடுமையான பொருளதார நெருக்கடியால் நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. நாடே கலவரக்காடானது. பொதுமக்களின் கோபத்திற்கு பயந்து முன்னாள் அதிபர்களான மகிந்த ராஜபக்சே மற்றும் கோத்தபய ராஜபக்சே இருவரும் நாட்டை விட்டே ஓடினர்.

இதையடுத்து முன்னாள் இலங்கை பிரதமராக இருந்து ரணில் விக்ரமசிங்கே தலைமையில் காபந்து ஆட்சி அமைக்கப்பட்டு தற்போது நடைமுறையில் இருக்கிறது. ஓரளவு இயல்பு நிலை திரும்பியதை தொடர்ந்து ஒருவர் பின் ஒருவராக கோத்தபய ராஜபக்சே மற்றும் மகிந்த ராஜபக்சே இருவரும் இலங்கை திரும்பினர். அனாலும் இலங்கை இன்னும் பொருளாதார தன்னிறைவு அடையவில்லை. எனவே அண்டை நாடான இந்தியா இலங்கைக்கு பல்வேறு மனிதாபிமான உதவிகளை செய்து வருகிறது.

இந்நிலையில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இலங்கை சென்றுள்ளார்.  இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவை கொழும்புவில் நேற்று சந்தித்து பேசினார். அண்டை நாடுகளுக்கு முதல் முக்கியத்துவம் அளிப்பதில் பிரதமர் நரேந்திர மோடி உறுதியுடன் இருப்பதால், தான் இலங்கை வந்திருப்பதாக அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். இந்த பயணயத்தின் போது இலங்கையின் வடக்கு பகுதியில் உள்ள 3 தீவுகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டம் அமைப்பதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்படவுள்ளன.

இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரியையும், ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். சிக்கலான நேரத்தில் இலங்கைக்கு இந்திய துணை நிற்கும் எனவும் அவர் தெரிவித்தார். இலங்கையின் பொருளாதார நிலை மேம்பட அங்கு எரிசக்தி, சுற்றுலா மற்றும் கட்டமைப்பு துறைகளில் அதிக முதலீடுகளை இந்தியா ஊக்குவிக்கும் எனவும் அவர் உறுதியளித்தார். இலங்கைக்கான தேவையை நிறைவேற்ற கூடுதல் முயற்சிகள் மேற்கொள்ள இந்தியா தயாராக உள்ளது எனவும் அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

இதையடுத்து இன்று ஜெய்சங்கரை இலங்கையின் முன்னாள் அதிபர்களான மகிந்த மற்றும் கோத்தபய ராஜபக்சே ஆகியோரும் சந்தித்து பேசினர். இலங்கையின் முன்னேறத்திற்கு இந்தியா செய்து வரும் உதவிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டதாகவும், தற்போதுள்ள அசாதாரண சூழலை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டதாகவும் ராஜபகக்ஷே சகோதரர்கள் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.

இந்தப் பயணத்தின் போது இலங்கையின் மீன்வளத் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை தான் சந்தித்து இரு நாட்டு மீனவர்களுக்கிடையே இருக்கும் பிரச்னைகள் குறித்து விவாதித்ததாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். மேலும், அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் சசஜித் பிரேமதாசாவையும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்துப் பேசியுள்ளார்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *