கானா: நைஜீரியா நாட்டில் டிப்தீரியா நோய் பரவலால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நோய் பரவலை கட்டுப்படுத்த அவசரகால நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து நைஜீரியா நாட்டு மருத்துவ குழு தலைவர் டாக்டர் இஃபடயோ அடேடிஃபா கூறுகையில், ‘நாட்டிலுள்ள 36 மாகாணங்களில் குறிப்பாக 4 மாகாணங்களில்தான் டிப்தீரியா தொற்றின் தாக்கம் அதிகமாக இருப்பதால், அங்கு கண்காணிப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளது’ என்றார். மேலும் கானோ மாகாணத்தின் ஹெல்த் கமிஷன் தலைவர் டாக்டர் அமினு சான்யாவா கூறுகையில், ‘எங்கள் மாகாணத்தில் 70 பேருக்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பாக்டீரியா தொற்றால் 25 பேர் இறந்துள்ளனர். மூச்சுப் பிரச்னை, இதயம் செயலழிப்பு மற்றும் பக்கவாதம் போன்ற பிரச்னைகளை டிப்தீரியா ஏற்படுத்துகிறது. தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களும், நெரிசலான இடங்களில் வாழ்பவர்களும், சுகாதாரமற்ற இடங்களில் வாழ்பவர்களும்தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்’ என்றார்.