உடுமலை: கணியூர் பேரூராட்சியின் நுழைவு வாயிலிலேயே மலைபோல் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. இதன் அருகே பத்திரப்பதிவு அலுவலகம் உள்ளது. மேலும், தினசரி ஏராளமான வாகனங்கள் இந்த வழியாக செல்கின்றன. பேரூராட்சியில் மக்கும் குப்பை, மக்காத குப்பையை பிரித்தெடுக்கும் திடக்கழிவு மேலாண்மை திட்டம் அமலில் இருந்தும் சரிவர கடைபிடிக்கவில்லை. இதனால் குப்பைகளை மக்கள் சாலையோரம் வீசி செல்கின்றனர். இவை முறையாக அப்புறப்படுத்தப்படாமல் உள்ளன. பிளாஸ்டிக் கழிவுளை ஆடு, மாடுகள் தின்றுவிடுகின்றன. இதனால் அவற்றுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதன் அருகே தினசரி காலையில் 6 மணி முதல் 8 மணி வரை காய்கறி ஏலம் நடக்கிறது. 20 கடைகள் உள்ளன. வியாபாரிகளும், பொதுமக்களும் வந்து செல்லும் பகுதியில் குப்பை குவிந்து துர்நாற்றம் வீசுவதால் சிரமப்படுகின்றனர். நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.எனவே, உடனடியாக மலைபோல் குவிந்துள்ள குப்பைகளை அகற்ற பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.