புவெனஸ் ஐரிஸ்: அர்ஜெண்டினாவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான அர்ஜெண்டினாவில் இன்று அதிகாலை 3.39 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் அந்நாட்டின் கார்போடா பகுதியில் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.5 புள்ளிகளாக பதிவானது. இதனால், வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. வீட்டில் இருந்த பொருட்கள் கீழே விழுந்து உருண்டு ஓடின. இதனால் தூக்கத்தில் இருந்த பொதுமக்கள் அச்சத்தில் அலறியடித்தபடி வீடுகளில் இருந்து பாதுகாப்பிற்காக தெருக்களில் குவிந்தனர்.
பல இடங்களில் வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. ஒரு சில இடங்களில் கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்தது. அப்போது வீடுகள் அதிர்ந்தது, பொருட்கள் உருண்டு ஓடியது, கதவுகள், ஜன்னல்கள் ஆடியது தொடர்பான வீடியோக்களை பொதுமக்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த நிலநடுக்கத்தினால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதவிவரங்களும் உடனடியாக தெரியவில்லை. இருப்பினும் சில இடங்களில் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.