புதுச்சேரி: அரசு சட்டக் கல்லூரிக்கு மாணவர்களுக்கான பேருந்து பயன்பாட்டுக்கு வரும் நிகழ்வில், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி காத்திருக்க வேண்டிய சூழலில் டென்ஷனாகி அலுவலகத்துக்கு திரும்பினார். அங்கு வந்த அமைச்சர், முதல்வர் அறைக்கு சென்று அவரை சமாதானப்படுத்தி அழைத்து வந்தார்.
புதுச்சேரி பாஜக மாநிலங்களவை எம்.பி செல்வகணபதி நிதியிலிருந்து அரசு சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு புதுப் பேருந்து வாங்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரும் விழா புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் இன்று நடந்தது.
பேருந்தும் சட்டப்பேரவை வாயிலில் நிறுத்தப்பட்டு தொடங்கி வைக்க, சட்டத் துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், பேரவைத் தலைவர் செல்வம், சட்டக் கல்லூரி முதல்வர் சீனிவாசன் தயாராக இருந்தனர். நிகழ்வில் பங்கேற்க வருமாறு முதல்வரை அழைத்தனர். அலுவலகத்தில் கோப்பு பார்த்துக் கொண்டிருந்த முதல்வர் ரங்கசாமி அங்கு வந்தார்.
பச்சைக்கொடி வாங்கி பஸ்ஸை தொடக்கி வைக்கும் வகையில் அசைக்க முதல்வர் ரங்கசாமி தயாரானார். அப்போது முதல்வரின் மருமகனான அமைச்சர் நமச்சிவாயம் அங்கு வந்துக்கொண்டிருப்பதாக தெரிவித்தனர். ஆனால், அமைச்சர் வர பத்து நிமிடங்கள் காலதாமதமானது. அதனால், டென்ஷனான முதல்வர் ரங்கசாமி அங்கிருந்து தனது அறைக்கு திரும்பினார்.
பேரவை வளாகத்துக்கு அமைச்சர் நமச்சிவாயம் வந்தவுடன் அங்கு நடந்ததை சட்டக் கல்லூரி முதல்வர் உள்ளிட்டோர் விளக்கினர். இதையடுத்து முதல்வர் அறைக்கு அமைச்சர் நமச்சிவாயம் சென்று சந்தித்தார். கோப்புகளில் கையெழுத்திட்டு கொண்டிருந்த முதல்வர் சிறிது நேரத்துக்கு பிறகு சமாதானமடைந்து அங்கிருந்து வெளியே வந்து பேருந்தை தொடக்கி வைத்தார்.