தமிழ்நாடு பா.ஜ.க-வின் மாநில செயற்குழுக் கூட்டம் கடலூரில் நடைபெற்றது. தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்ட இந்தக் கூட்டம், காலை 10 மணிக்குத் தொடங்கியது. முதலில் பேசிய பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, “இமாச்சலப் பிரதேசத்தில் ஒரு சதவிகிதத்தில்தான் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறோம். இதனால் காங்கிரஸுக்குக் கிடைத்தது பெரிய வெற்றி என்பது ஆகாது. கடந்த செயற்குழுக் கூட்டத்துக்கும், தற்போது நடைபெறும் செயற்குழுக் கூட்டத்துக்குமுள்ள வித்தியாசம் பா.ஜ.க-வின் வளர்ச்சியைக் காட்டுகிறது.

நாம் செய்யும் பணிகளைச் சிறப்பாகச் செய்து முடித்தால், வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம். அதற்கேற்றவாறு நமது செயல்பாடுகள் அமைய வேண்டும். தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிட்டு, அதை விளக்கி தமிழகம் முழுவதும் நடைப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறேன். ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் நடைப்பயணம் தொடங்கவிருக்கிறேன்” என்றார். தொடர்ந்து கீழ்க்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

* இரண்டாம் உலகப்போரின் முடிவில் உலக நாடுகள் சேர்ந்து பல கூட்டமைப்பை உருவாக்கின. அவற்றில் ஒன்றுதான் ஜி20. இந்த ஆண்டு ஜி20 அமைப்பின் தலைவராக பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி ஜி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். ஜி20 உச்சி மாநாடு 2023 செப்டம்பரில் புது டெல்லியில் நடைபெறுவதற்கு முன்பு, சென்னையின் மாமல்லபுரம், கேரளாவின் திருவனந்தபுரம், கர்நாடகாவின் பெங்களூரு உள்ளிட்ட 15 நகரங்களில் இந்தியாவின் தலைமையில் ஜி20 கூட்டமைப்புக் கூட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் உலகளாவிய வர்த்தகம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கலாசார பரிவர்த்தனை, சுற்றுலா மேம்பாடு போன்ற பல முக்கிய முடிவுகள் குறித்த கலந்தாய்வு நடைபெறும்.

நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி முறைப்படி ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தலைவராகவும், 19 உறுப்பு நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளையும் சேர்த்து ஜி20 உச்சி மாநாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்கவிருக்கிறார். ஒரே நேரத்தில் ரஷ்ய நாட்டுப் பிரதிநிதிகளையும், அமெரிக்கப் பிரதிநிதிகளையும், சீன நாட்டுப் பிரதிநிதிகளையும் புது டெல்லியில் வைத்து பேசக்கூடிய வல்லமை பாரதப் பிரதமர் மோடிக்கு உண்டு என்பதால்தான் ஜி20 தலைமைப் பொறுப்பு பாரதப் பிரதமர் மோடிக்குக் கிடைத்திருக்கிறது.

எதிர்காலத்தில் உலகப் பிரச்னைகளைத் தீர்த்துவைக்கும் நாடாக நம் பாரததேசத்தை உருவாக்கி, நமக்குப் பெருமை சேர்த்த நம் தேசத்தந்தை பாரதப் பிரதமர் ஜி20 கூட்டமைப்பின் தலைவர் நரேந்திர மோடி அவர்களை இந்த செயற்குழு பாராட்டி நன்றி தெரிவித்து வாழ்த்துகிறது.

* தமிழக சட்டசபையில் ஆளுநர் உரையின்போது ஆளுங்கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினரின் நடவடிக்கைகளை இந்தச் செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. `தமிழ்நாடு’ என்பதைவிட, `தமிழகம்’ என்ற பெயர் பொருத்தமாக இருக்கும் என்ற தனது கருத்தை ஆளுநர் ஒரு விழாவில் பேசியதை திசைதிருப்பி, மொழி அரசியலை முன்னெடுத்து, ஆளுநரை அவதூறு செய்தது கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைவு, தலைவிரித்தாடும் லஞ்ச லாவண்யம், பெருக்கெடுத்தோடும் ஊழல், நிர்வாகச் சீர்கேடு எனக் கடந்த ஒன்றரை வருட சோதனையான ஆட்சியை மூடி மறைக்க, தமிழகம், தமிழ்நாடு என்ற விவகாரத்தை ஊதிப் பெரிதாக்குகின்றனர். மொழிரீதியான பதற்றத்தை உருவாக்க முனைந்த திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு இந்தச் செயற்குழு தன் கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறது.

* திட்டமிட்டரீதியில் ஆளுநரை அவமானப்படுத்தி, சிவாஜி கிருஷ்ணமூர்த்தி என்ற தி.மு.க பேச்சாளரின் மூலம் ஆளுநரை தரக்குறைவாக விமர்சித்ததோடு, ஆளுநருக்குக் கொலை மிரட்டல் விடுத்ததையும், சட்டசபையில் கொலை நடந்தாலும் வழக்கு இல்லை என்று கூறி சட்டசபையின் கண்ணியத்தைக் குலைத்து, ஆளுநரைத் தரம் தாழ்ந்து பேசிய ஆர்.எஸ்.பாரதியையும் இன்னும் கைதுசெய்யாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் தமிழக அரசை இந்தச் செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. அவர்கள் இருவரையும் கைதுசெய்து சிறையிலடைக்க தமிழக காவல்துறை விரைந்து செயல்பட வேண்டும்.

மேலும், தமிழக ஆளுநரை ஒருமையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் இந்தச் செயற்குழு வற்புறுத்துகிறது.

* சேது சமுத்திர கப்பல் கால்வாய் திட்டத்தைத் திட்டமிட்ட பாதையில் விரைந்து முடிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தி.மு.க அரசு தீர்மானம் கொண்டுவந்திருக்கிறது. சேது சமுத்திர கப்பல் கால்வாய்த் திட்டத்தை தி.மு.க அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் திட்டமிட்ட பாதையில் செயல்படுத்த வேண்டும் என்றும், தேசநலன் கருதி ராமர் பாலத்துக்கு எந்தச் சேதமும் ஏற்படா வண்ணம் மாற்றுப் பாதையில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முடியுமா என ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்றும், உச்ச நீதிமன்றத்தில் மத்திய பா.ஜ.க அரசு 2018-ம் ஆண்டு திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறது.

அதே நிலைப்பாட்டைத்தான் தற்போது தமிழக சட்டமன்றத்திலும் தெளிவாக்கியிருக்கிறது பா.ஜ.க. 2018, மார்ச் மாதத்தில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் 4-ஏ சீரமைப்புப்படி திட்டத்தை நிறைவேற்ற கோரிக்கை வைத்தால், பா.ஜ.க ஏற்றுக்கொள்ளாது என்றும் குறிப்பிட்டிருக்கிறது. இதைத்தான் 2008-லிருந்து பா.ஜ.க பேசிவருகிறது.

எனவே, தற்போது கொண்டுவந்திருக்கும் இந்தத் தீர்மானத்தின் மூலம் பழைய சீரமைப்பு 4-ஏ அடிப்படையில், அதாவது ராமர் பாலத்தை இடித்து தமிழக அரசு கொண்டுவர நினைத்தால் பா.ஜ.க அதைக் கடுமையாக எதிர்க்கும். மேலும், இந்துக்களை முட்டாள்களாக எண்ணிக்கொண்டு, கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் செய்தது போன்ற மதவாத அரசியலை முன்னெடுக்கிறது இந்து விரோத தி.மு.க அரசு. கடந்த ஆட்சியில், இந்தத் திட்டத்தில் கால்வாய் ஆழமாகத் தோண்டப்பட்ட அந்தக் கோடிக்கணக்கான டன் மணல் எங்கே கொண்டு செல்லப்பட்டது… எவ்வளவு வருவாய் ஈட்டப்பட்டது போன்ற விவரங்களை மூடி மறைத்திருக்கின்றனர். கனிம வளங்கள் அதிகமுள்ள மணல் எங்கு எடுத்துச் செல்லப்பட்டது?

அந்த மணலில் அணு ஆற்றலுக்குப் பயன்படும் யுரேனியம் அதிக அளவில் உள்ளதாகவும், பல கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த மணல் சீனாவுக்கு எடுத்துச் சென்றுவிட்டதாகவும் சொல்லப்படுகிறது என்பது உண்மையா… போன்ற பல்வேறு புதைக்கப்பட்ட உண்மைகளை வெளிக்கொண்டு வருவதோடு, இதன் மூலம் மேலும் கனிமக் கொள்ளையை அரங்கேற்றத் துடிக்கும் தமிழக அரசின் முயற்சியைத் தடுத்து, பெரும்பான்மையான இந்திய மக்களின் இறை நம்பிக்கைக்குரிய ராமர் பாலத்துக்கு எவ்வித பாதிப்பும் இல்லாத வகையில் சேது கால்வாய்த் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என தமிழக பா.ஜ.க செயற்குழு தீர்மானிக்கிறது.

* ஒவ்வோர் ஆண்டும் பொங்கல் பண்டிகையின்போது பொங்கல் பரிசில் கரும்பு வழங்குவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு பா.ஜ.க விவசாய அணியின் போராட்டத்துக்குப் பின்னர்தான் தமிழக அரசு கரும்பு வழங்க ஒப்புக்கொண்டது. அதேநேரத்தில் கரும்பு கொள்முதலில் மாபெரும் ஊழல் நடந்து, விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. மேலும், சர்க்கரை ஆலைகளுக்கு வழங்கும் கரும்புக்கும் உற்பத்திச் செலவுக்கேற்ற விலை வழங்கவில்லை. அதேபோல் நெசவாளர்களுக்கு உரிய நேரத்தில் நூல் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டதால், பொங்கலுக்கு வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்ட வேட்டி, சேலைகளைக்கூட வழங்க முடியாமல் நெசவாளர்களின் வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டிருக்கிறது. மொத்தத்தில் தமிழக அரசின் மக்கள் விரோதச் செயல்களால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் தமிழக விவசாயிகள், நெசவாளர்களுக்காகத் தொடர்ந்து போராட்டங்களை நடத்துவது என பா.ஜ.க செயற்குழு தீர்மானிக்கிறது.

* காசி தமிழ்ச் சங்கமம் நம் பாரத பிரதமர் மோடி அவர்களால் புதுப்பிக்கப்பட்டிருப்பதால் ஒட்டுமொத்த தமிழர்களும் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கியிருக்கின்றனர். காசி தமிழ்ச் சங்கமம் விழாவைத் தொடங்கிவைத்துப் பேசிய பிரதமர், `திருக்குறள் 160 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உலகம் முழுவதும் தெய்விகப் புலவர் வள்ளுவர் புகழ் பாடப்படும்’ என்றார். தேசியகவி பாரதியார் பிறந்த டிசம்பர் 11-ம் தேதியை `தேசிய மொழிகள் தின’மாக அறிவித்தார், காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்வில் விடுதலைக்கவியின் பாடல்கள் கரகாட்டங்கள் உள்ளிட்ட தமிழகத்தின் பாரம்பர்யக் கலைகளை வரிசைப்படுத்தி, நமது பாரதம் ஒரே தேசம் என்பதை உணர்வூட்டி மகிழ்ந்தார்.

காசி தமிழ்ச் சங்கமம் இந்திய மாநிலங்களுக்கிடையேயான கலாசார பாலம் என்பதை பறைசாற்றும் வகையில் நடந்ததற்கும், காசி தமிழ்ச் சங்கமம் உலகத் தமிழர்களின் ஒப்பற்ற திருவிழாவாக, அதுவும் முழுமுதல் தலைமை ஆன்மிக பீடமான காசியில் நடந்தேறியதற்க்கும் காரணகர்த்தர் நம் தேசத்த ந்தை பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு தமிழக பா.ஜ.க செயற்குழு தன் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறது.

* தீண்டாமை, சட்டத்தால் ஒழிக்கப்பட்டுவிட்டது என்று அரசியலமைப்புச் சட்டம் முதல் அரசுப் பள்ளி பாடத்திட்டம் வரை அச்சிட்டு கொடுத்துக்கொண்டும், அதைப் படித்துக்கொண்டும் இருக்கிறோம். `இது திராவிட மாடல் அரசு’ என்றும், `பெரியார், அண்ணா, கலைஞர் வழி வந்த அரசு’ என்றும், `பகுத்தறிவு, சுயமரியாதை, சீர்திருத்தம் போன்றவை எங்கள் கொள்கை’ என்றும் வாய்ஜாலம் காட்டி பிதற்றிக்கொண்டிருக்கும் தமிழக அரசின் தலைமை அமைச்சரே… உங்களின் பொய் வசனங்களுக்கு சம்மட்டி அடி கொடுப்பதுபோல புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா, இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியல் இன மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த் தொட்டியில், மனிதக் கழிவுகளைக் கலந்த கொடூரமான தீண்டாமைக் குற்றவாளிகளை, குற்றம் நிகழ்ந்து ஒரு மாதம் கடந்தும் கைது செய்யாதது ஏன்?

தற்போது தமிழக அரசின் சட்டம்-ஒழுங்கு தோற்றுப்போய்விட்டது என்பதை ஒப்புக்கொள்ளும் வகையில், வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றியிருக்கிறீர்கள். அறிவுலகம் கேள்வி கேட்கிறது, பதில் சொல்லுங்கள். இனியாவது ஈவு இரக்கம் இல்லாத குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, சட்டத்தின் முன்பாக நிறுத்தி, கடுமையான தண்டனையைப் பெற்று தாருங்கள் என தமிழக பா.ஜ.க செயற்குழு வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

* தமிழகம் தொன்றுதொட்டு தொழில் வளர்ச்சிகளும், உலக வர்த்தகத்திலும் முன்னோடியாக இருந்துவந்தது. இந்தியாவில் தொழிலில் உயர்ந்த மாநிலம் ஒன்று சர்வதேசக் கடல் வாணிபப் பாதையில்இருக்கிறது என்றால், அது தமிழகம்தான். மற்ற மாநிலங்களுக்கு இந்தச் சிறப்பும் வாய்ப்பும் இல்லை. இந்த நிலையில், தமிழகத்துக்கு வரும் வெளிநாட்டு முதலீடுகள் குறைந்துவருகின்றன. கவர்னர் உரையின்போது பொய்யாக அந்நிய முதலீடுகள் குறித்து தரப்பட்ட தரவுகளைப் படிக்க, கவர்னர் அவர்கள் மறுத்த சம்பவத்தை தமிழகம் அறியும். அதில் குறிப்பிடத்தக்க விஷயம் அந்நிய முதலீடுகள் குறித்த பொய்யான தகவல்கள்.

* ஒரு நிறுவனம் உள்ளே வரும்போது `தமிழகத்தில் `உங்களுக்கு இதே போன்ற வசதிகளைச் செய்து தருகிறோம். எங்களுக்கு என்ன தருவீர்கள்’ எனக் கையேந்தும் அமைச்சர்களின் செயல்களால் முதலிடத்தில் இருக்கவேண்டிய தமிழகம், 2022-ல் நான்காம் இடத்தில் இருக்கிறது. தி.மு.க ஊழல்கள் குறித்து அனைத்து ஒன்றிய, நகரப் பகுதி மண்டலங்களிலும் பிரசார நிகழ்ச்சிகளை நடத்துவது என பா.ஜ.க செயற்குழு தீர்மானிக்கிறது.

பா.ஜ.க தேசிய செயற்குழுக் கூட்டத்தில் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா அவர்களின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டிருப்பதை செயற்குழு வரவேற்பதோடு, பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *