தூத்துக்குடி கோரம்பள்ளத்தைச் சேர்ந்த ரியாஸ் என்பவருக்குச் சொந்தமான நாட்டுப்படகில், திரேஸ்புரத்தைச் சேர்ந்த சேக் முகமது, ஜெயபால், அண்டோ ஆகியோர் கடந்த 17-ம் தேதி திரேஸ்புரத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் 18-ம் தேதி காலை சுமார் 9 மணியளவில் காயல்பட்டினம் கொம்புதுறை கடற்கரைப் பகுதியிலிருந்து சுமார் 35 கடல்மைல் தொலைவில் படகில் மீன்பிடித்துக் கொண்டு இருந்ததாக சொல்லப்படுகிறது. பின்னர் மீன்பிடித்துவிட்டு கரைக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது எதிரே கன்டெய்னர் பெட்டிகள் ஏற்றி வந்த கப்பல் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில், நாட்டுப்படகு உடைந்துள்ளது. படகிலிருந்த 3 மீனவர்கள் தூக்கி வீசப்பட்டிருக்கின்றனர். படகும் கடலில் மூழ்கியுள்ளது. நாட்டுப்படகின் உடைந்த பாகங்களை பிடித்தவாறே கடலில் தத்தளித்திருக்கின்றனர். பின்னர் கொம்புதுறையிலிருந்து மீன் பிடிக்கச் சென்ற ரிச்சர்டு என்பவர் கடலில் தத்தளித்த ஜெயபால், ஆண்டோ ஆகிய இருவரை மீட்டார். சேக் முகமதை தேடிப் பார்த்தும் அவரைக் காணவில்லை என்பதால், மீட்கப்பட்ட 2 மீனவர்களும் கரைக்கு அழைத்துவரப்பட்டனர்.