சென்னை: பைக்கில் லிப்ட் கொடுத்த கூட்டுறவு ஊழியரின் நகையைப் பறித்துக் கொண்டு தப்பிய வழிப்பறி கொள்ளையனை போலீஸார் தேடிவருகின்றனர்.
சென்னை முகப்பேர் மேற்குபகுதியைச் சேர்ந்தவர் ராஜா.கூட்டுறவு சொசைட்டி ஒன்றில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்றுமுன்தினம் மாலை விருகம்பாக்கத்தில் உள்ள நண்பர் வீட்டுக்குச் சென்றுவிட்டு இரவு 10 மணி அளவில் கோயம்பேடு மார்க்கெட் அருகே உள்ள `இ’ சாலை வழியாக பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு சாலையில் நின்று கொண்டிருந்த இளைஞர் ஒருவர் கை காட்டி ‘லிப்ட்’ கேட்டுள்ளார். இரக்கப்பட்ட ராஜா, அந்த இளைஞரை தனது பைக்கின் பின்னால் அமர வைத்து அழைத்துச் சென்று கொண்டிருந்தார். சிறிது தூரம் சென்றவுடன் திடீரென, ராஜா அணிந்திருந்த 6 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு பின்னால் இருந்த இளைஞர் கீழே குதித்துத் தப்பி ஓடினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜா உடனடியாக இதுகுறித்து கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.