பெரும்பாலும் அஞ்சலி ஹஸ்தராகக் காட்சி கொடுக்கும் ஆஞ்சநேயர் இத்தலத்தில் அபய ஹஸ்தராக அருள்பாலிக்கிறார். தூக்கிய அவரது வலது திருக்கரம் பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறது. கழுத்தில் சாளக்கிராம மாலை அணிந்திருக்கும் இந்த ஆஞ்சநேயர் தன் இடது கையில் சௌகந்திக மலரை ஏந்தியிருக்கிறார். இடுப்பில் ஒரு சிறு வாள் தரித்து வாலில் மணியோடு திகழ்கிறார். திருப்பாதம் ஒன்றால் அரக்கன் போன்ற ஓர் உருவை மிதித்து கம்பீரமாகக் காட்சி தருகிறார். இந்த ஆஞ்சநேயரை தரிசனம் செய்து வேண்டிக்கொண்டால் மனதில் உள்ள பயம் நீங்கும் என்பது நம்பிக்கை. மேலும் காரிய ஸித்தி அருள்பவர் இந்த ஆஞ்சநேயர்.
இந்த ஆலயம் நாயக்கர்கள் காலத்தில் கட்டப்பட்டுப் பெருமையோடு திகழ்ந்தது என்பதை இக்கோயிலில் காணப்படும் கல்வெட்டுக் குறிப்புகள் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. இந்த ஆலயத்தின் முகப்பில் இருக்கும் கல்வெட்டில்,
‘ஸ்ரீமுக வருடம், சித்திரை மாதம் இரண்டாம் நாள் வீர வெங்கடபதி ராயர் காலத்தில் கோவிந்தப்ப நாயக்கர் கட்டிய ஆலய மண்டபம். இந்த தர்மத்துக்கும், தண்ணீர் பந்தல் சத்திரத்துக்கும், கழனிபாக்கத்தில், கழனியில் குழி முப்பதும், கொல்லையில் குழி ஐம்பதும், சந்திராதித்தவரை நடத்திக் கொள்ளவும். இதற்கு யாதொரு தீங்கு செய்பவர்கள் கங்கை தீர்த்தத்தில் காராம் பசுவைக் கொன்ற தோஷத்தை அடைவார்கள்’ என்னும் செய்தி காணப்படுகிறது.
கி.பி. 1573 ம் ஆண்டு இந்தக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்ட கோவிந்தப்ப நாயக்கர் என்பவர் இந்தக் கோயிலுக்கு மண்டபம் கட்டி தண்ணீர்பந்தல் அமைத்து திருப்பணி செய்துள்ளார். ஆனால் காலப்போக்கில் இந்த ஆலயம் சிதைவுற்றது. பூஜைகள் வழிபாடுகள் இன்றி சிலகாலம் இருந்தது.