தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகமான டேன்டீயின் சில பகுதிகளை வனத்துறை வசம் ஒப்படைக்கும் அரசின் முடிவைக் கண்டித்து எதிர்க்கட்சியினர் குரல் கொடுத்து வருகின்றனர். நீலகிரி மாவட்டம் கூடலூரில் பாஜக சார்பில் கடந்த மாதம் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதன் தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். அப்போது தமிழக அரசு, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரனை அண்ணாமலை கடுமையாக விமர்சித்தார்.
இந்த நிலையில், நீலகிரி மாவட்டம் குன்னூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாளர்களிடம் பேசிய வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், “டேன்டீ நிறுவனம் நஷ்டம் என்பதே இல்லாதவாறு வருங்காலத்தில் மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இதற்காகவே குழு அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். டேன்டீ நிறுவனத்தில் வேலையின்மை என்பதே இல்லாத நிலை உருவாக்கப்படும். பாஜக மாநில தலைவருக்கு தேயிலையைப் பற்றி என்ன தெரியும்? எதுவுமே தெரியாமலும் விளங்காமலும் தான் எப்போதும் மேடையில் பேசி வருகிறார்” என்றார்.