பா.ஜ.க தேசிய மகளிர் அணித் தலைவியும், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ-வுமான வானதி சீனிவாசன் கோவையில் இன்று நடைபெற்ற இலவச சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரத் திட்டத்தைத் தொடங்கிவைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “ஆயிரம் குடும்பங்கள் பயன்பெறும் வகையில், இலவச சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரத்தை நிறுவியிருக்கிறோம். குடிநீர் பிரச்னையைப் போக்க இந்தத் திட்டத்தை முன்னெடுத்திருக்கிறோம். தொகுதி முழுவதும் ஐந்து இடங்களில் இனிவரும் காலங்களில் நிறுவவிருக்கிறோம். குறிப்பாக,பெண்களுக்கு இந்தத் திட்டம் மிகுந்த பயனளிக்கும்.
கோவையில் சாலைகளின் நிலை மிகவும் மோசமாக இருக்கிறது. கோவை மக்களுக்கு சாலை விஷயத்தில் தமிழக அரசு மிகப்பெரிய துரோகத்தைச் செய்துகொண்டிருக்கிறது. இது குறித்து விரைவில் போராட்டம் நடத்தலாம் என்று இருக்கிறோம்.
கோவை மாவட்டப் பொறுப்பு அமைச்சர், மாநகராட்சித் தேர்தலில் கொலுசு மட்டும் கொடுத்து மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார். கோவை மக்களை முட்டாள்கள் என நினைத்துக்கொண்டிருக்கிறார். இதற்குத் தகுந்த பாடத்தை மக்கள் புகட்டுவார்கள்” என்றார்.
சமீபத்தில், காயத்ரி ரகுராம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது குறித்து பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு, “சமீபத்தில் நடந்த பிரச்னைகள் குறித்துச் சொன்னார்கள். உடனே, மாநிலத் தலைமையைத் தொடர்புகொண்டு உரிய நடவடிக்கை எடுக்கச் சொன்னேன். பா.ஜ.க கட்சியில் இது போன்ற பிரச்னைகளுக்குக் கடுமையான நடவடிக்கைகள் எடுத்துக்கொண்டிருக்கிறோம். காயத்ரி ரகுராம், பொதுவெளியில் பேசாமல், கட்சிக்குள் பேசினால் சரியாக இருக்கும்” என்றார்.