வங்கதேசம் செல்லும் இந்திய அணி 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதில் முதலாவது ஒரு நாள் போட்டி நாளை (4.11.2022) நடைபெறவுள்ளது. இப்போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள், டிசம்பர் 1-ம் தேதியே வங்கதேசம் சென்று பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக்கோப்பைக்கு பின் ஓய்விலிருந்த முகமது ஷமி தற்போது நடைபெறவுள்ள போட்டியில் பங்கேற்பதற்காகப் பயிற்சியை மேற்கொண்டிருக்கிறார். அப்போது அவருக்குக் கையில் காயம் ஏற்பட்டுள்ளது.
இந்திய வேகப்பந்துவீச்சாளார் முகமது ஷமிக்குக் காயம் ஏற்பட்டதால் வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து அவர் விலகியுள்ளார் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. தற்போது முகமது ஷமி இப்போட்டியில் பங்கேற்க முடியாத நிலையில் அவருக்குப் பதிலாக உம்ரான் மாலிக் அணியில் விளையாட நியமிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
பும்ரா மற்றும் புவனேஸ்வர் குமார் போன்ற மூத்த வேகப்பந்து வீச்சாளர்கள் போட்டிகளில் பங்கேற்க முடியாத சூழலில் முகமது ஷமி இடம்பெற்று இருந்தது ரசிகர்களுக்குச் சற்று நம்பிக்கையைச் கொடுத்திருந்தது. ஆனால் தற்போது ஏற்பட்ட காயம் காரணமாக முகமது ஷமி போட்டியில் இருந்து விலகி இருப்பது பலருக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.