1. நேற்று, அகமது பின் அலி மைதானத்தில் குரோயேசியா அணியும் பெல்ஜியம் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்காததால், 0-0 என்ற கோல் கணக்கில் ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. இதனால் பெல்ஜியம் அணி அடுத்தச் சுற்று வாய்ப்பை இழந்து தொடரில் இருந்து வெளியேறியது. செய்தியாளர் சந்திப்பில், தனது அணி வெளியேற்றப்பட்டதை அடுத்து தனது பதவியிலிருந்து விலகுவதாக பெல்ஜியம் பயிற்சியாளர் ராபர்டோ மார்டினெஸ் கூறியுள்ளார். 49 வயதான அவர், 2016 ஆம் ஆண்டு முதல் பெல்ஜியம் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்தார்.
2. நேற்று முன்தினம் அர்ஜெண்டினா அணியும் போலந்து அணியும் மோதிய ஆட்டத்தில் அர்ஜெண்டினா அணி, 2-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது. ஆட்டத்தில், மெஸ்ஸி பெனால்டி வாய்ப்பை தவறவிட்டாலும், 46 ஆவது நிமிடத்தில் அலெக்சிஸ் மேக் அல்லிஸ்டர் கோல் அடித்தார். இவருடைய தந்தை கார்லோஸ், புகழ்பெற்ற கால்பந்து வீரர் மரோடானாவுடன் இணைந்து அர்ஜென்டினா அணிக்காக விளையாடி உள்ளார். இவருடைய மகனான அல்லிஸ்டர், நடந்து வரும் உலக கோப்பையில் அர்ஜென்டினா அணியில் மெஸ்ஸி தலைமையில் விளையாடி வருகிறார்.
3. நேற்று, குரூப் F பிரிவில் மொராக்கோ அணியும் கனடா அணியும் அல் துமாமா மைதானத்தில் நடந்த போட்டியில் விளையாடின. இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் மொராக்கோ அணி 2 கோல்கள் அடித்தது. கனடா அணி ஒரு கோலை மட்டுமே அடித்தது. ஆட்டம் முடிவில், 2-1 என்ற கோல் கணக்கில் மொராக்கோ அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், உலகக் கோப்பையில் நாக் அவுட் சுற்றுக்கு இரண்டாவது முறையாக தகுதி பெற்றுள்ளது மொராக்கோ அணி. இதற்கு முன் 1986 ஆம் ஆண்டு, முதல் முறையாக நாக் அவுட் சுற்றுக்கு அந்த அணி தகுதிப் பெற்றிருந்தது.
4. நேற்று குரூப் E பிரிவில், காலிஃபா சர்வதேச மைதானத்தில் ஸ்பெயின் அணியும் ஜப்பான் அணியும் மோதின. ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பான் அணி வெற்றி பெற்றது. ஜப்பான் அணி வெறும் 17.7% மட்டுமே பந்தை தங்கள் ஆளுகைக்குள் வைத்திருந்தது. உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு அணி இவ்வளவு குறைவான Ball Possession சதவீதத்தோடு ஒரு போட்டியை இதற்கு முன் வென்றதே இல்லை . இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற ஜப்பான் அணியும், தோல்வியடைந்த ஸ்பெயின் அணியும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கிறது.
5. ரவுண்ட் ஆப் 16 சுற்றில் அர்ஜெண்டினா அணியும் ஆஸ்திரேலியா அணியும் மோதும் சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில், ஆஸ்திரேலிய அணி வீரர் டெஜெனிக் மெஸ்ஸி பற்றி பேசிய கருத்து வைரலாகி வருகிறது. ‘மெஸ்ஸியை எனக்கும் பிடிக்கும். கால்பந்தின் ஆகச்சிறந்த வீரர் அவர். ஆனால், அவருடன் ஆடுவதெல்லாம் பெருமை கிடையாது. அவரும் ஒரு சாதாரண மனிதரே. எங்களுக்கு ரவுண்ட் ஆப் 16 இல் ஆடுவதுதான் பெருமை’ என பேசியிருக்கிறார்.