சென்னை: சென்னையில் ரூ.25 லட்சத்திற்கு அதிகமாக சொத்து வரி நிலுவை வைத்துள்ள பெரிய நிறுவனங்கள், தனிநபர்கள் உட்பட 39 பேரின் பட்டியல் சென்னை மாநகராட்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் முக்கிய வருவாய் ஆக சொத்து வரி உள்ளது. நடப்பு முதல் அரையாண்டில் சென்னை மாநகராட்சிக்கு ரூ.700 கோடி சொத்து வரி கிடைத்தது. இதனைத் தொடர்ந்து 2-வது அரையாண்டுக்கான சொத்து வரியை வசூலிக்கும் பணியில் சென்னை மாநகராட்சி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம்,1919, பிரிவு, 104-ன்படி, ஒவ்வொரு அரையாண்டு தொடக்கத்தின் முதல் 15 நாட்களுக்குள் சொத்து வரியை செலுத்த வேண்டும். காலம் தாழ்த்தி சொத்து வரி செலுத்தினால் 2 சதவீதம் தனிவட்டி விதிக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு வரும் 15-ம் தேதி வரை தனிவட்டி விதிப்பு இல்லாமல் சொத்து வரி வசூலிக்கப்பட்டு வருகிறது.
இதனைத் தவிர்த்து சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியினை குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்தாதவர்கள் சொத்து வரி செலுத்த தவறியவர்களாக (Defaulters) அறிவிக்கப்படுவார்கள். இதன்படி 2022-23-ம் நிதி ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வரை ரூ.25 லட்சத்திற்க்கும் மேற்பட்ட சொத்து வரி தொகை செலுத்தாமல் ரூ.24.17 கோடி அளவிற்கு நிலுவை வைத்துள்ள 39 சொத்து உரிமையாளர்களின் விவரங்கள் அடங்கிய பட்டியல் ((Defaulters List) சென்னை மாநகராட்சியின் இணையதளத்தில் அறிவிப்பாக வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் சிட்டி டவர் ஹோட்டல், பச்சையப்பன் அறக்கட்டளை, விஎஸ்டி மேட்டார்ஸ், மீனாட்சி பெண்கள் கல்லூரி, ஹோட்டல் பிரெசிடென்ஸி டவர், கல்யாணி மருத்துவமனை, சோழிங்கநல்லூர் சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ், தி பிரசிடென்சி கிளப் உள்ளிட்ட நிறுவனங்கள் 25 லட்சத்திற்கு அதிகமாக சொத்து வரி நிலுவை வைத்துள்ளது.