புதுடில்லி ‘இஸ்ரோ’ உளவு முறைகேடு தொடர்பான வழக்கில், விஞ்ஞானி நம்பி நாராயணன் மீது பொய் வழக்கு பதிவு செய்த நான்கு முன்னாள் போலீஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட முன் ஜாமினை, உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
‘இஸ்ரோ’ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் விஞ்ஞானியாக பணியாற்றியவர் நம்பி நாராயணன்.
கடந்த 1994ல், நாட்டின் முக்கியமான பாதுகாப்பு ரகசியங்களை வெளிநாட்டினருக்கு விற்றதாக, கேரள போலீசார் இவர் மீது வழக்குப் பதிவு செய்து, கைது செய்தனர்.
இந்த வழக்கில், 50 நாட்களுக்கு மேலாக இவர் சிறையில் இருந்தார். அப்போது போலீஸ் அதிகாரிகள் இவருக்கு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தொல்லை கொடுத்தனர். பின் இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரித்தது.
இதற்கிடையே, இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘குற்றமற்றவர்’ என கூறி, நம்பி நாராயணனை, 1998ல் விடுவித்தது.
அவருக்கு இழப்பீடாக, 1.3 கோடி ரூபாய் செலுத்தும்படி, கேரள அரசுக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது.
இந்நிலையில், நம்பி நாராயணனை இந்த வழக்கில் சிக்க வைத்த கேரள முன்னாள் டி.ஜி.பி., ஸ்ரீகுமார், முன்னாள் போலீஸ் அதிகாரிகள் விஜயன், துர்கா தத், புலனாய்வுத் துறை முன்னாள் அதிகாரி ஜெயப்பிரகாஷ் ஆகியோருக்கு, கேரள உயர் நீதிமன்றம் முன் ஜாமின் வழங்கியது.
இதை எதிர்த்து, சி.பி.ஐ., சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இதை விசாரித்த நீதிமன்றம், நான்கு பேருக்கும் வழங்கப்பட்ட முன் ஜாமினை ரத்து செய்ததுடன், மீண்டும் உயர் நீதிமன்றத்தை நாடும்படி உத்தரவிட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்