ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் மீதான தடை மசோதா மீது ஆளுநர் எழுப்பிய கேள்விகளுக்கு, அரசு பதிலளித்த பிறகும், ஆளுநர் தரப்பிலிருந்து இன்னும் அதற்கு ஒப்புதல் அளிக்கப்படாமல் இருப்பது தமிழக அரசியலில் விவாதப் பொருளாகியிருக்கிறது. இதற்கிடையில் ஆளுநரை நேரில் சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, `மசோதா தனது பரிசீலனையில் இருப்பதாக ஆளுநர் தெரிவித்தார்’ என கூறியிருந்தார்.
இதுவொருபுறமிருக்க, ஆளுநர் ஒப்புதல் அளித்த அவசர சட்டதுக்கு தமிழக அரசு அரசாணை வெளியிடாதது தொடர்பாக தி.மு.க அரசை, பா.ஜ.க தொடர்ந்து விமர்சித்து வருகிறது. இந்த நிலையில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, அவசர சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த பிறகு ஆன்லைன் சூதாட்டத்துக்கு பலியான அத்தனை உயிர்களுக்கும், முதல்வரும், சட்டத்துறை அமைச்சரும் தான் பொறுப்பு எனத் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து அண்ணாமலை தன் ட்விட்டர் பக்கத்தில், “அவசர சட்டத்துக்கு அரசாணை பிறப்பிக்காததால் எந்த தவறும் இழைக்கப்படவில்லை என்று திறனற்ற தி.மு.க அரசின் சட்டத்துறை அமைச்சர் பத்திரிகையாளர்களைச் சந்தித்து இன்று கூறியிருக்கிறார். அவசர சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கிய தேதிக்கும், சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தேதிக்கும் இடையே 12 நாள்கள் இடைவெளி இருந்தது. அவசர சட்டத்துக்கு அரசாணை பிறப்பிக்காததால் அக்டோபர் மாதம் 7-ம் தேதிக்கு பிறகு ஆன்லைன் சூதாட்டத்துக்கு தமிழகத்தில் 8 உயிர்கள் பலியாகியிருக்கிறது. இதற்கு திறனற்ற தி.மு.க அரசின் சட்டத்துறை அமைச்சரும், முதல்வர் ஆகியோரே பொறுப்பு” என கூறியிருக்கிறார்.