ஆஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பைக்குப் பின் இந்திய அணி நியூசிலாந்தில் நடைபெற்று வரும் டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர் வீரர்கள் ஓய்வில் இருப்பதால் இளம் வீரர்கள் இப்போட்டியில் கலந்துகொண்டு விளையாடி வருகின்றனர். இந்நிலையில் கேரளாவைச் சேர்ந்த இளம் வீரரான சஞ்சு சாம்சன் தொடர்ந்து வாய்ப்புகள் மறுக்கப்பட்டுப் புறக்கணிக்கப்பட்டு வருவதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதனால் சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். IPL போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கேப்டனாகவும், உள்ளூர் போட்டிகளில் சிறப்பாகவும் விளையாடி வரும் சஞ்சு சாம்சன், தற்போது நடைபெற்று வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியின் ஸ்குவாடில் இடம்பெற்றிருந்தார். ஆனால் பிளேயிங் லெவனில் எடுக்கப்படவில்லை. இதுகுறித்து பேசிய ஷிகர் தவான், “அணிக்குக் கூடுதல் பந்துவீச்சாளர் தேவை என்கிற அடிப்படையில் சாம்சனை வெளியில் அமர்த்திவிட்டு ஆல்ரவுண்டரை எடுக்கிறோம்” என்று கூறியிருந்தார்.
‘ரிஷப் பண்ட் போன்ற வீரர்கள் தொடர்ச்சியாகச் சொதப்பி வந்த போதும் தொடர்ந்து வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு வரும் நிலையில் சஞ்சு சாம்சனுக்கு மட்டும் ஏன் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன’ என்ற கேள்வியை எழுப்பி ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்த வந்த நிலையில், தற்போது முன்னாள் வீரர்கள் பலரும் சஞ்சு சாம்சனுக்குத் தங்களது ஆதரவினைத் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, கத்தார் நாட்டில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் சஞ்சு சாம்சனின் ரசிகர் ஒருவர், அவரது புகைப்படத்துடன், “நாங்கள் சஞ்சு சாம்சனுக்கு சப்போர்ட் செய்கிறோம்” என்று எழுதிய பேனர் ஒன்றை மைதானத்துக்கு எடுத்துச் சென்று தனது ஆதரவைத் தெரிவித்திருக்கிறார். அப்புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.