தேனி: மிசோராம் அணிக்கு எதிரான ‘கூச் பெஹார்’ டிராபி லீக் போட்டியில் தமிழகத்தின் முகமது அலி முச்சதம், அதிஷ் இரட்டை சதம் விளாசினர்.
இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் 19 வயதுக்குட்பட்டோருக்கான ‘கூச் பெஹார்’ டிராபி (நான்கு நாள் போட்டி) நடக்கிறது. தேனியில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்க (டி.என்.சி.ஏ.,) அகாடமி மைதானத்தில் நடக்கும் லீக் போட்டியில் தமிழகம், மிசோராம் அணிகள் விளையாடுகின்றன.
‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்’ செய்த தமிழக அணிக்கு அருண்குமார் (0), கேப்டன் பத்ரிநாத் (4), தியாஷ் (7) ஏமாற்றினர். பின் இணைந்த முகமது அலி, அதிஷ் ஜோடி மிசோராம் பந்துவீச்சை வெளுத்துவாங்கியது. அபாரமாக ஆடிய முகமது, முதன்முறையாக ‘டிரிபிள் செஞ்சுரி’ விளாசினார். இதன்மூலம் இம்முறை முச்சதம் விளாசிய முதல் வீரரானார். மறுமுனையில் அசத்திய அதிஷ், தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார். இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 476 ரன் எடுத்து அவுட்டாகாமல் உள்ளது.
முதல் நாள் முடிவில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 545 ரன் குவித்திருந்தது. முகமது (301), அதிஷ் (213) அவுட்டாகாமல் இருந்தனர்.
Advertisement