புதுடெல்லி: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த அப்தாப் (28). இவரது காதலி ஷிரத்தா வாக்கர் (26). இவர்கள் இருவரும் டெல்லியில் தனியாக வசித்து வந்துள்ளனர். ஷிரத்தாவை கொலை செய்த அப்தாப், உடல் பாகங்களை 35 துண்டுகளாக வெட்டி தெற்கு டெல்லியில் உள்ள வனப்பகுதியில் வீசியது தெரிய வந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த டெல்லி போலீஸார், அப்தாப்பை கைது செய்து விசாரித்து வருகின்றனர். ஆனால், அப்தாப் குற்றவாளி என நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லாமல் போலீஸார் திணறி வருகின்றனர்.
இதுகுறித்து டெல்லி போலீ ஸார் கூறியதாவது: அப்தாப், ஷிரத்தா வசித்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு தெருக்களில் உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவானவற்றை ஆராய்ந்தோம். அவர்கள் தங்கியிருந்த சத்தர்பூர் பஹாடி பகுதியில் அமைந்துள்ள சுமார் 150 சிசிடிவி கேமராக்களின் பதிவுகள் ஆராயப்பட்டுள்ளன. அக்டோபர் மாதத்தில் கிடைத்த வீடியோ பதிவில் அப்தாப், தனது வீட்டிலிருந்து காலை 4 மணிக்கு வெளியே வருவது தெரிய வந்துள்ளது.
ஷிரத்தாவின் உடல் உறுப்பு களை அகற்றுவதில் அப்தாப் மிக கவனமான செயல்பட்டுள்ளார். அவர் தனது செல்போனின் லொக்கேஷனை அணைத்து வைத்துவிட்டு, உடல் பாகங்களை வீச வெளியே சென்றுள்ளார். எந்தவிதமான எலக்ட்ரானிக் சாட்சியங்களையோ, தடயங் களையோ அவர் விடவில்லை.
சில சிசிடிவி கேமராக்களில் இருந்து கிடைத்த வீடியோக்களில், கடைசி சில நாட்கள் பதிவான வீடியோக்கள் மட்டுமே உள்ளன. பழைய வீடியோக்கள் அழிந்த விட்டன. சத்தர்பூர் பஹாடி பகுதியானது, வனப்பகுதிக்கு அருகே அமைந் துள்ளது. இதன்மூலம் அங்கு எளிதில் சென்று உடல்பாகங்களை வீசி விட்டு வரமுடியும். ஷிரத்தா, அப்தாப் இருவருக்கும் நெருங்கிய நண்பராக இருந்த பத்ரி தொடர்பாகவும் விசாரணை நடத்தி வருகிறோம். அவர் எங்கிருக்கிறார் என்பது குறித்து விசாரித்து வருகிறோம்.
அப்தாப் தந்தையின் வாக்குமூலத்தையும் பதிவு செய்துள்ளோம். அப்போது அப்தாப் தனியாகவும், சுதந்திரமாகவும் வசிப்பதற்கு விரும்பினார் என்று அவரது தந்தை கூறியுள்ளார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு போலீஸார் தெரிவித்துள்ளனர்.