அதேபோல டெண்டர் முறைகேடு, வழக்கமாக ஒப்பந்தம் விடப்பட்டு பணி தொடங்குவார்கள், பணி முடித்த பிறகுதான் பில் வாங்குவார்கள். ஆனால் இந்த ஆட்சியில் அப்படி இல்லை. ஒப்பந்தம் செய்யப்பட்டவுடன் பணி செய்யாமலேயே பில் வாங்கிக் கொள்கிறார்கள். ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம். அதுபோல இந்த ஆட்சியில் ஊழல் நடைபெறுவதற்கு இதுவே மிகப்பெரிய சான்று. கரூரில் ஊழல் நடந்திருக்கிறது. ஒரு சில அதிகாரிகளை மட்டும் சஸ்பெண்ட் செய்திருக்கிறார்கள். ஆனால் ஒரு அதிகாரி மூலமாக இது நடக்காது. யாரோ ஒரு அதிகாரமிக்கவருடைய ஆணையின் பேரில்தான் இப்படிப்பட்ட சம்பவம் நடைபெற முடியும். டாஸ்மாக் முறைகேடு பற்றி நான் சொல்லவே தேவையில்லை. முறைகேடாக மதுபான ஆலையிலிருந்து கலால் வரி செலுத்தாமல் கொண்டுவரப்படுகின்ற மதுபான வகைகளை பார்களில் விற்று, கொள்ளை லாபம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். அதைப்பற்றி விசாரிக்க வேண்டும் என்று ஆளுநரிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம்” என்று கூறினார்.
ஆனால், “இந்தச் சந்திப்பில் ஆளும் திமுகதான் பிரதான டார்க்கெட் என்றாலும் இதற்குப் பின்னால் பல அரசியல் காய்நகர்த்தல்களும் இருக்கின்றன” என்கின்றனர், அதிமுகவின் முன்னணி நிர்வாகிகள் சிலர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய நிர்வாகிகள்,
“ இந்த ஆட்சியில் நிகழ்ந்து வரும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, ஊழல் முறைகேடுகள் என அனைத்தையும் ஆளுநரிடம் மனுவாகக் கொடுத்திருக்கிறோம். எடப்பாடியார் சில விஷயங்களை ஆளுநரிடம் வாசித்தும் காட்டினார். நாங்கள் குறிப்பிட்ட பல்வேறு விஷயங்கள், ஏற்கெனவே தெரியும் என்பதுபோல் தான் ஆளுநரின் ரியாக்ஷனும் இருந்தது. அதுமட்டுமல்ல, ஆளும் திமுக அரசாங்கத்தின் மீது ஊழல் சார்ந்து கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். ஆளுநரே நேரடியாக சில விஷயங்களில் தலையிட வேண்டும், அதிகாரிகளை அழைத்து விளக்கம் கேட்கவேண்டும் என்கிற கோரிக்கைகளையும் முன்வைத்திருக்கிறோம். ஆனால், இந்தச் சந்திப்புக்கு இது மட்டுமே காரணமல்ல. பாஜக நாங்கள்தான் எதிர்க்கட்சி என ஒரு தோற்றத்தை தமிழ்நாட்டில் உருவாக்கிவந்த நிலையில், எடப்பாடியாரின் சமீபத்திய செயல்பாடுகள் அதை முற்றிலுமாக மாற்றிவிட்டன. ஆளுநருடனான சந்திப்பும் அதில் ஒன்று.