நாகர்கோவில்: ராமானுஜரும், விவேகானந்தரும் ஆன்மிகத்தை மக்கள் நலனுக்காக பயன்படுத்தினர் என ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம் சூட்டினார். மனித குலத்துக்கும், ஆன்மிகத்துக்கும் பகவத் ராமானுஜர் ஆற்றிய அரும்பணிகளை விளக்கும் ‘ராமானுஜ சாம்ராஜ்ய மகோத்சவம்` என்ற இருநாள் நிகழ்ச்சி கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரா வளாகத்தில் நேற்று தொடங்கியது.
கர்நாடக மாநிலம் மேல்கோட்டை யதுகிரி யதிராஜமடம் பீடாதிபதி ஸ்ரீராஜநாராயண ராமானுஜ ஜீயர் சுவாமிகள் தலைமை வகித்தார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடக்கி வைத்து பேசியதாவது: கன்னியாகுமரி ஒரு புண்ணியபூமி. விவேகானந்தர் உலகின் பார்வையில் படுவதற்கு முன்பு, அவரது கன்னியாகுமரி வருகை முக்கியமானதாக அமைந்துள்ளது. அதன்பிறகு அவர் அமெரிக்காவின் சிகாகோ நகரில் ஆற்றிய உரை, இந்தியாவின் தர்மம் மற்றும் அறத்தை உலகுக்கு சொல்லும் விதமாக அமைந்தது.