புதுச்சேரி: புதுச்சேரி முதலியார்பேட்டை அனிதா நகரைச் சேர்ந்தவர் ரவுடி பாஸ்கர். வழக்கு ஒன்றில் கடந்த 2012-ல் தண்டனை பெற்ற இவர், சிறையில் அடைக்கப்பட்டார். தனது மனைவி எழிலரசி மீது சந்தேகப்பட்டு, சிறையில் இருந்து 2013-ல் பரோலில் வந்தார். தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து மனைவியை கொன்று, உழந்தைகீரப்பாளையம் ஏரிக்கரையில் புதைத்தார்.
தற்போது ஏரிக்கரையில் சாலை அமைக்கும் பணி நடக்கிறது. இதில், தான் பிடிபட்டு விடுவோமோ என்று அஞ்சி, 2 மாதங்களுக்கு முன்பு, மனைவியின் எலும்புக்கூட்டை தோண்டி எடுத்து ஏரியில் வீசியுள்ளார். இதில் பாஸ்கர், அவரது கூட்டாளிகள் வேலு, சரவணன் மனோகர் ஆகிய நால்வரையும் போலீஸார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இச்சூழலில் எஸ்பி ரவிக்குமார் தலைமையில் ஆய்வாளர் இனியன், ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளர் அரவிந்தன் மற்றும் அவரது உதவியாளர்கள் நேற்று உழந்தைகீரப்பாளையம் ஏரியில் நீரில் மூழ்கி, எழிலரசியின் எலும்புகூட்டினை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது சில எலும்புகள், சேலை கிடைத்தது. அதை டிஎன்ஏ சோதனைக்கு அனுப்பினர். எழிலரசின் தலை, உடல் பாக எலும்புகள் கிடைக்கவில்லை.
எழிலரசி கொலை செய்யப்பட்ட சூழலில், அவருடன் தொடர்பில் இருந்ததாகக் கருதப்பட்ட ரவுடி சுருட்டை செந்திலும், 9 ஆண்டுகளாக மாயமாகவுள்ளார். அவரை தனிப்படை போலீஸார் தேடி வருகின்றனர்.